பிரசாரம் செய்யும்போது வரலையா? கொரோனாவை காட்டி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியாது...நரேஷ் திகாயத்
டெல்லி: கொரோனா பரவலை காரணமாக முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை ஒடுக்க முடியாது என விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் தியாகத் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் உலக நாடுகளைவிட படுவேகமாக இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் அதிகமான நிலையில் இருந்து வருகிறது.
தமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. அதேபோல் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகளும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லி போராட்டம்
இந்த நிலையில் டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவும் என்கிற கருத்து பரப்பிவிடப்படுகிறது. ஆனால் இதனை விவசாய சங்கத்தினர் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகள்
ஏனெனில் டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகள் கொரோனா கால கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான நரேஷ் திகாயத் கூறுகையில், மேற்கு வங்கத்தில் பல லட்சம் பேரை ஒன்று திரட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரம் செய்கின்றன. அப்போது கொரோனா பரவல் இல்லையா?
தொடரும் போராட்டம்
நாங்கள் எந்த சூழ்நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப் போவது இல்லை. மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் திட்டவட்டமாக. இதனிடையே போராடும் விவசாய சங்கங்கள் அனைத்தும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
விவசாயிகளிடையே கருத்து வேறுபாடு?
ஆனால் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவதில் விவசாய சங்கங்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதில் ஹரியான விவசாய சங்கங்களுக்கும் பஞ்சாப் விவசாய சங்கங்களும் இருவேறு கருத்துகளை முன்வைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.