தலைநகரில் பதற்றம்.. டெல்லியில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா.. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு உறுதி
டெல்லி: தலைநகர் டெல்லியில் தற்போது ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பு இதற்கு ஓமிக்ரான் எனப் பெயரிட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா தான் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால் உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன.
உலக நாடுகளை அலறவிடும் ஓமிக்ரான்.. பிரிட்டன் நாட்டில் மட்டும் 160 பேருக்கு பாதிப்பு.. அடுத்து என்ன?
இந்தியாவில் ஓமிக்ரான்
இதனால் பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்தன. இருப்பினும், இது பெரியளவில் பலன் தந்ததாகத் தெரியவில்லை. இதுவரை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்கனவே பரவிவிட்டது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய 2 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டது. அதன் பிறகு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.
மேலும் ஒருவருக்குப் பாதிப்பு
இந்தச் சூழலில் டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் இதுவரைஓமிக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தன்சானியா நாட்டில் இருந்து டெல்லி திரும்பியவர் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
மொத்தம் 12 பேரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதில் இந்த ஒருவருக்கு மட்டும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த நபரின் பயண தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் முயற்சிகளையும் டெல்லி அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசு
முன்னதாக இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது குறித்து மத்திய அரசு கூறுகையில், "ஓமிக்ரான் கண்டறியப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது. அறிகுறிகளும் கூட தீவிரமாக இல்லை. நாட்டில் தற்போது ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்ல. அனைவரும் பொறுப்புடன் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தது.
ஓமிக்ரான் என்றால் என்ன
ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டு சில காலமே ஆவதால், இது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை. இது குறித்து ஆய்வுகள் உலகெங்கும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் இந்த கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே முதலில் கூறினர். அதேநேரம் முன்பு கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் இதில் அதிகப்படியாக, அதாவது சுமார் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் இருப்பதாக எச்சரித்துப் பிற நாட்டு ஆய்வாளர்கள், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் இருந்தால் மட்டுமே ஓமிக்ரான் குறித்து உறுதியாகக் கூற முடியும் எனவும் குறிப்பிட்டனர். இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு ஓமிக்ரான் கொரோனவை கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.