15 வயசு சிறுவனின் காலில் இரும்புக் கம்பி அடி.. துடித்த குழந்தை.. ஏன் இந்த வெறி?
டெல்லி: டெல்லியின் முஸ்தபாபாத் பகுதிதான் வன்முறையாளர்களிடம் சிக்கி மிகப் பெரிய தாக்குதலை சந்தித்துள்ளது. அங்குள்ள மசூதிகள் சிலவற்றை கலவரக்காரர்கள் தீவைத்து எரித்துள்ளனர். முஸ்லீம்கள் வசிக்கும் வீடுகளையும் தாக்கி கொளுத்தியுள்ளனர். குழந்தைகளைக் கூட அவர்கள் விடவில்லை என்பது மனதை பதற வைக்கிறது.
வட கிழக்கு டெல்லியில் உள்ள முஸ்தபாபாத்தில் 2 மசூதிகளை கலவரக்காரர்கள் கொளுத்தி சேதப்படுத்தியுள்ளனர். கற்களால் தாக்கியும், தீவைத்து எரித்தும் சேதப்படுத்தியுள்ளனர். ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் அவர்கள் தீவைப்பில் ஈடுபட்டதாக தி வயர் இணையதளம் செய்தி குறிப்பிடுகிறது.
முஸ்லீம்கள் வசிக்கும் ஜக்கி எனப்படும் குடிசை வீடுகளை ஒன்று விடாமல் தீவைத்து வெறியாட்டம் போட்டுள்ளது இந்த கும்பல். இவர்கள் கொளுத்திய வீடுகளில் அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
டெல்லியில் வன்முறைகள் தூண்டப்படுகிறதா? தன்னிச்சையானதா? ப.சிதம்பரம் கேள்வி
|
செவ்வாய் மாலை முதல்
செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்தே முஸ்தபாபாத் பெரும் தாக்குதலுக்குள்ளானது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களைக் குறி வைத்து கல்வீச்சில் இறங்கிய சிஏஏ ஆதரவாளர்கள் பின்னர் இரும்புத் தடி உள்ளிட்ட பல வகையான ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். குழந்தைகளைக் கூட அவர்கள் விடவில்லை. இதில் பல குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.
|
கொடூரமான தாக்குதல்
கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதாக தி வயர் கூறுகிறது. 2 மசூதிகளுக்குள் புகுந்த இந்த வெறிக் கும்பல் அவற்றுக்குத் தீவைத்து எரித்தது. மேலும் மசூதியின் கோபுரங்களில் காவிக் கொடியையும் இக்கும்பல் கட்டியுள்ளது. பல இளைஞர்கள் கையில் பிஸ்டல் இருந்ததாகவும், முகத்தை அவர்கள் கர்ச்சீப்பால் மூடியிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
|
சிறுவர்கள் மீதும் கடும் தாக்குதல்
இந்த வெறியர்கள் குழந்தைகளையும் கூட ஈவு இரக்கமின்றி தாக்கியதை பார்த்து பதறிய மக்கள் அவர்களிடமிருந்து போராடி குழந்தைகளை மீட்டது மனதை உலுக்குவதாக இருந்தது. ஒரு 15 வயது சிறுவனுக்கு தலையிலும் காலிலும் மிகப் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதை நேரில் பார்த்து அதிர்ந்ததாக வயர் செய்தியாளர் கூறுகிறார். அந்த சிறுவனால் நடக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இரும்பு ராடு கொண்டு தாக்கியுள்ளனர் அந்த வெறியர்கள்.
வெளிக் கொணர்ந்த ஆம் ஆத்மி
முஸ்தபாபாத் கலவர பாதிப்புகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் அமித் மிஸ்ரா டிவிட்டர் மூலம் வெளிக் கொணர்ந்தார். அதன் பிறகே அதன் கொடூரம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. மேலும் முஸ்தபாபாத் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹாஜி யூனிஸ் இதை ரீடிவீட் செய்து இப்பகுதி மக்களுக்கு உதவி கோரி தொடர்ந்து டிவீட் போட்டபடியே இருந்தார்.
ஏன் இந்த வெறித்தனம்
இதுதொடர்பான சில வீடியோக்களும் வெளியாகியுள்ளன. இதைப் பார்க்கும்போது இப்படி ஒரு வெறித்தனமான தாக்குதலால் யாருக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்ற வருத்தம் தோய்ந்த கவலைதான் மனதில் எழுகிறது. அனைவரும் அமைதி காத்து கலவரம் ஓய வழிவகுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒரே கோரிக்கையாக உள்ளது.