கொளுத்தும் வெயில்.. ஜூலை 8-ம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. டெல்லி அரசு உத்தரவு
டெல்லி: தலைநகரான டெல்லியில் கடுமையான வெயில் கொளுத்தி வருவதால், 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை இன்னும் பெரிதாக துவங்காத காரணத்தால் வட இந்திய மாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக தலைநகரான டெல்லியில் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. 100 டிகிரிக்கு மேல் வெயில் இப்போதும் கொளுத்தி வருகிறது. வரும் வாரங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வெயிலின் தாக்கத்தை அடுத்து 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் காரணமாக ஜூலை 8-ம் தேதி வரை, 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிஷ்சோடியா கூறுகையில், "டெல்லியில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வரும் ஜூலை 8-ஆம் நாள் வரை நீட்டித்துள்ளோம் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட படி குறிக்கப்பட்ட நாளில் வகுப்புகள் தொடங்கும். இந்த விடுப்பு அறிவிப்பு தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இருதரப்புக்கும் பொருந்தும்" என்றார்.