டெல்லி ஸ்டேடியத்தை நாய் வாக்கிங்க்கு பயன்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி, மனைவிக்கு கிடைத்த செம்ம டிரான்ஸ்பர்
டெல்லி: டெல்லி தியாகராஜ் அரசு விளையாட்டு மைதானத்தில் இருந்து வீரர்களை வெளியேற்றிவிட்டு தமது நாயுடன் வாக்கிங் வந்து சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார், மனைவி ரின்கு டுக்கா ஆகியோர் அதிரடியாக லடாக் மற்றும் அருணாச்சல் பிரதேசங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் அரசின் கீழ் உள்ளது தியாகராஜ் விளையாட்டு மைதானம். இங்கு வீரர்கள், பயிற்சியாளர்கள் வழக்கமாக பயிற்சிகள் எடுத்து வந்தனர். ஆனால் அண்மைக்காலமாக அனைவருமே இரவு 7 மணிக்கே விளையாட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்; டெல்லி முதன்மை செயலாளரான சஞ்சீவ் கிர்வார், தமது நாயுடன் வாக்கிங் வருவதற்காக அனைவரும் வெளியேற்றப்படுகின்றனர் என்பது புகார்.
இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனை சஞ்சீவ் கிர்வார் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இது தொடர்பாக சஞ்சீவ் கிர்வார் கூறுகையில், சில நேரங்களில்தான் நாயுடன் நான் வாக்கிங் செல்வேன். நான் வாக்கிங் போவதால் வீரர்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டதே இல்லை என்றார்.
டெல்லி நேரு பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் வாக்கிங்..செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்..வீடியோ டிரென்ட்
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் சஞ்சீவ் கிர்வாரும் அவரது மனைவி ரின்கு டுக்காவும் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சஞ்சீவ் கிர்வார், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்; அவரது மனைவி ரின்கு டுக்கா, அருணாச்சல பிரதேசத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.