துண்டு, துண்டாக வெட்டி டிரைவர் கொடூர கொலை... டெல்லியில் லிவிங் டூ கெதர் ஜோடி வெறிச்செயல்
Recommended Video
டெல்லி: டெல்லியில் உபேர் கால் டாக்சி ஒட்டுநரை கொன்று உடலை சிறிய துண்டுகளாக வெட்டி, சாக்கடையில் வீசிய லிவிங் டூ கெதர் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: டெல்லியின் ஷகார்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த். இவர் உபேர் நிறுவனத்தில் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த வாரம் முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. தொலைப்பேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து,
அவரது மனைவி ஷகார்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக, டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு கோவிந்த் எங்கிருக்கிறார் என்ற எந்த தடயமும் கிடைக்கவில்லை. கோவிந்த்தின் கார், கடைசியாக மதன்கிரியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் கபாசேரா பார்டருக்கு முன்பதிவு
செய்யப்பட்டிருந்தது. கபாசேரா சென்ற பிறகு காரின் ஜிபிஎஸ் கருவி வேலை செய்யாமல் இருந்துள்ளது.
சிசிடிவி கேமரா
இதையடுத்து சிசிடிவி கேமரா உதவியுடன் கோவிந்தின் கார் மற்றும் மொபைலை போலீசார் தேடினர். இந்நிலையில் மெகருலி, குருகிராம் இடையே கோவிந்தின் கார் மற்றும் மொபைலுடன் ஒரு ஜோடி சென்று கொண்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த ஜோடியை பிடித்த போலீசார், விசாரணை நடத்தினர்.
குற்றவாளிகள் கைது
காரில் சென்ற ஜோடி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பரகத் அலி என்ற அம்ரோகா (34) மற்றும் அவரது காதலி சீமா சர்மா (30) என்பது தெரியவந்தது. இருவரும் டெல்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் கொள்ளை அடித்துவிட்டு கொலை செய்து வந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பரகத் அலி ஜோடி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மயக்க மருந்து கலந்த டீ
அப்போது சில அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த ஜனவரி 29ம் தேதி எம்ஜி ரோட்டில் இருந்து காஜியாபாத் செல்வதற்காக பரகத் அலி மற்றும் அவரது காதலியும் கோவிந்தின் காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். செல்லும் வழியில், கோவிந்துக்கு மயக்க மருந்து கலந்த டீ மற்றும் பிஸ்கட்டை சீமா சர்மா கொடுத்துள்ளார் அதை குடித்த கோவிந்த் மயங்கிவிட்டார்.
சாக்கடையில் வீச்சு
இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறித்த பரகத் அலி ஜோடி, கோவிந்தை கொலை செய்தனர். அடுத்த நாள் (ஜன.30)
கோவிந்தின் உடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியுள்ளனர். பின்னர் அந்த உடல் துண்டுகளை சிறிய பண்டலாக கட்டியுள்ளனர். அந்த பண்டல்களை கிரேட்டர் நொய்டாவில் சாக்கடையில் வீசியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
கார், செல் பறிமுதல்
இந்நிலையில் கோவிந்தின் மனைவி அளித்த புகாரை தொடர்ந்து, சிசிடிவி கேமரா உதவியால் பரகத் அலி மற்றும் சீமா சர்மா ஜோடி சிக்கிக்கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் வாழ்ககை வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஹுண்டாய் எக்சன்ட் கார் மற்றும் கோவிந்தின் மொபைல்கள் ஆகியவற்றை போலீசார்
மீட்டனர். அவர்கள் பணத்துக்காக கோவிந்தை கொடூரமாக கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.