காங்கிரஸ் தொண்டர்கள் vs காவல்துறை.. போர்க் களமான டெல்லி பார்டர்.. தடியடி, தள்ளுமுள்ளு
டெல்லி: டெல்லி-நொய்டா எல்லைப்பகுதி ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அவர்களுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க கிளம்பியதும், அதை போலீசார் தடுத்ததும்தான் இதற்கு காரணம்.
டெல்லி-நொய்டா பார்டருக்கும், பலியான பெண் கிராமத்துக்கும் சுமார் 130 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சாலை மார்க்கமாக அங்கு செல்லப் போவதாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று காலை அறிவித்தனர்.
தடை உத்தரவு இருப்பதாக காரணம் காட்டி 2 நாட்கள் முன்பு ஹத்ராஸ் செல்ல ராகுல் முயன்றபோது போலீசார் தடுத்தனர். ராகுல் காந்தி காரிலிருந்து கீழே இறங்கி நடந்து செல்ல முற்பட்டபோது போலீசார் அவரை பிடித்து கீழே தள்ளினர்.
மாஸ் காட்டிய காங்கிரஸ்.. இறங்கி வந்த போலீஸ்.. ராகுல் காந்தி, பிரியங்கா ஹத்ராஸ் செல்ல அனுமதி
பெரும் தொண்டர் படை
இதன் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை கைது செய்தனர். இந்த நிலையில்தான், மறுபடியும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று ஹத்ராஸ் செல்ல முடிவெடுத்தனர். கடந்த முறையை போல காவல் துறை தங்கள் தலைவர்கள் மீது கை வைத்து விடக்கூடாது என்பதற்காக நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் அணி வகுத்தனர். அவர்கள் காங்கிரசையும் அதன் தலைவர்களையும் வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.
போலீஸ் குவிப்பு
காங்கிரஸ் கட்சியினர் ஆக்ரோஷமாக இருப்பார்கள் என்பதை அறிந்த காவல்துறையும் டெல்லி-நொய்டா எல்லையில் நூற்றுக்கணக்கான போலீசாரை குவித்தது. தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் பீச்சி அடிக்கும் வண்டிகள் நிறுத்தப்பட்டன. காவல்துறையினர் மூன்று அடுக்குகளாக நின்றனர். ஒவ்வொரு அடுக்காக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடைத்துக் கொண்டு வந்தாலும் அவர்களை விடக் கூடாது என்பதற்காக மூன்று பிரிவாக போலீசார் அணி வகுத்து நின்றனர்.
தள்ளுமுள்ளு
காங்கிரஸ் தொண்டர்களில், திரளாக பெண்களும் வந்ததால் அவர்களை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண் போலீசார் குவிக்கப்பட்டனர். தொண்டர்கள் நெருங்கியதும், அவர்களை போலீஸ் தடுத்தனர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவர் வாகனங்களையும் போலீசார் மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இந்த தள்ளு முள்ளு காரணமாக பல கி.மீ தூரத்திற்கு பிற வாகனங்கள் அணி வகுத்து நின்கின்றன. ஆம்புலன்சுகளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
Recommended Video
அனுமதி கிடைத்தது
ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் ஆக்ரோஷமாக இருந்தனர். ராகுல் காந்தியும், பிரியங்காவும் முன்வைத்த காலை பின் வைக்கப் போவதில்லை என அறிவித்தனர். காங்கிரஸ் காட்டிய ஆவேசத்தால், மேலிடத்திடம் கேட்டு பதில் சொல்வதாக அங்கிருந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். பிறகு 5 நிமிடங்களில், ராகுல், பிரியங்கா உட்பட காங்கிரசைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழு மட்டும் ஹத்ராஸ் செல்ல அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
|
தடியடி
இதையடுத்து, காருக்கு வெளியே வந்து தகவலை அறிவித்தார் ராகுல் காந்தி. பின்னர், அவரும், பிரியங்காவும் தனித்தனி கார்களில் ஹத்ராஸ் நோக்கி யமுனா ஹைவேயில் பயணிக்க ஆரம்பித்தனர். அவர்கள் கிளம்பியதும், பின்னால் செல்ல முயன்ற மேலும் சில தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.