அமித் ஷா பதவி விலக வேண்டும்.. நெருக்கும் திமுக, காங்கிரஸ்.. நாடாளுமன்றத்தில் 23 கட்சிகள் நோட்டீஸ்
உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ, திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, இன்று தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடும் அமளியுடன் தொடங்க உள்ளது. முக்கியமான பிரச்சனைகளுக்கு இடையில் இந்த கூட்டத்தொடர் நடக்க உள்ளது.
டெல்லியில் சிஏஏ போராட்டத்தில் கடந்த வாரம் கலவரம் ஏற்பட்டது. டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த கூட்டத்தொடரில் இந்த டெல்லி கலவரம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
முதற்கட்டமாக காங்கிரஸ் எம்பி அத்தீர் ரஞ்சன் சவுத்திரி அமித் ஷாவிற்கு எதிராக அவையில் நோட்டீஸ் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி உட்பட மொத்தம் 23 கட்சிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அமித் ஷாவிற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.