கேரளாவில் 2 சேனல்களுக்கு திடீர் தடை.. கடும் எதிர்ப்பு.. திரும்ப பெற்ற மத்திய அரசு.. என்ன நடந்தது?
டெல்லி: டெல்லி கலவரம் குறித்த செய்தியை ஒளிபரப்பியதற்காக கேரளாவை சேர்ந்த இரண்டு தொலைக்காட்சி சேனல்களுக்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த தடை திரும்ப பெறப்பட்டுள்ளது.
டெல்லி கலவரம் நடந்து முடிந்து ஒருவாரம் ஆகியும் அதன் பாதிப்பு இன்னும் தலைநகரில் போகவில்லை. தற்போது டெல்லியில் கொஞ்சம் அமைதி நிலவி வருகிறது. அங்கு போலீசார் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி கலவரத்தில் 320 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கலவரத்தில் காயம் அடைந்த பலர் டெல்லியில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இரண்டு சேனல் தடை
டெல்லி கலவரம் குறித்த செய்தியை ஒளிபரப்பியதற்காக கேரளாவை சேர்ந்த இரண்டு தொலைக்காட்சி சேனல்களுக்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. கேரளாவை சேர்ந்த பிரபலமான ஏசியாநெட் மற்றும் மீடியாஒன் ஆகிய சேனல்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சேனலிடம் விளக்கமும் கேட்கப்பட்டது. நேற்று மாலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த நோட்டீசை அனுப்பியது.
விதி மீறல்
இந்த இரண்டு சேனல்களும் ஒளிபரப்புத்துறை விதிகளை மீறிவிட்டதாக கூறி தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு சேனல்களும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே நடந்த கலவரத்தை ஒளிபரப்பி உள்ளது. இது தவறு. மத்திய அரசுதான் இந்த கலவரத்திற்கு காரணம். அமைதியாக அரசு கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது என்று இந்த செய்தி நிறுவனங்கள் குற்றஞ்சாட்டி இருக்கிறது. இது தவறு.
போலீஸ் நிலை
சாலையில் போராட்டம் செய்தவர்கள் ஜெய் ஸ்ரீராம், இஸ்லாமியர்கள் தாக்கப்படுகிறார்கள். அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது,. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் உடைக்கப்பட்டுள்ளது என்று கூறியதாக இந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மத ரீதியான தாக்குதல். மத கலவரத்தை தூண்டும் வகையில் இந்த செய்திகள் ஒளிபரப்பட்டுள்ளது என்று இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அமைச்சர் மற்றும் ஆர்எஸ்எஸ்
அதேபோல் ஆர்எஸ்எஸ் அமைப்புதான் இந்த கலவரத்தை தூண்டிவிட்டது என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் சரியாக செயல்படவில்லை. இதனால் இந்த சேனலுக்கு தடை விதிக்கிறோம். இது தொடர்பாக இரண்டு செய்தி நிறுவனங்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது கேரளா முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பதில் கொடுத்தது
இது முழுக்க முழுக்க கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று செய்தி நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளது. எங்களை முடக்க பார்க்கிறார்கள். டெல்லி கலவரத்தை உண்மையாக நேர்மையாக ஒளிபரப்பியதற்கு எங்களை தடை செய்கிறார்கள் என்று மீடியா ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் எங்கள் செய்தியாளர்கள் உயிரை பணயம் வைத்து செய்தி கொடுக்கிறார்கள், ஆனால் நேர்மையான எங்களை தடை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று ஏசியாநெட் சேனல் தெரிவித்துள்ளது.
செம வைரல்
இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக சர்வாதிகார நாடாக மாறி வருகிறது. இது மிகப்பெரிய தவறு. சேனல்கள் அரசுக்கு எதிராக பேசினால் அதை தடை செய்வது இந்தியாவில் இதற்கு முன் நடந்தது இல்லை.எமெர்ஜென்சி காலத்தில் மட்டுமே சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அது இப்போது சாதாரண நாட்களில் கூட இந்தியாவில் செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது, என்று பலர் குறிப்பிட்டுள்ளனர்.
|
ப. சிதம்பரம் கருத்து
முக்கியமாக காங்கிரஸ் தலைவர்கள் பலர் அரசின் இந்த முடிவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டு செய்தி சேனல்களை முடக்கியது தொடர்பாக வெளியாகி உள்ள உத்தரவு இந்திய பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான அரசியலமைப்பற்ற தலையீடு என்று காங்கிரஸ் எம்பி ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வந்தது
இந்த நிலையில் இந்த செய்தி சேனல்கள் இரண்டும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. தொடர் விமர்சனத்தை அடுத்து செய்தி சேனல்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது. ஏசியாநெட் சேனல் இன்று அதிகாலை 1.30 மணிக்கு செயல்பட தொடங்கியது. அதேபோல் மீடியா ஒன் சேனல் இன்று காலை 11 மணிக்கு செயல்பட தொடங்கியது.
என்ன விளக்கம்
இது தொடர்பாக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அளித்த விளக்கத்தில், இரண்டு சேனல்களிலும் செய்யப்பட்ட ஒளிபரப்பு தடை திரும்ப பெறப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டோம். அதனால் தடையை திரும்ப பெற்றுள்ளோம். நாங்கள் பத்திரிக்கை சுதந்திரத்தை மதிக்கிறோம். பிரதமர் மோடியும் எங்களிடம் இது குறித்து கவலையை தெரிவித்தார், என்று அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.