டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.. அத்துடன் வீடுகளை இழந்தோருக்கு 5லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஷாகீன் பாக் பகுதியில் 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. ஆனால் இந்த போராட்டங்களுக்கு பாஜக உள்ளிட்ட சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே போராட்டம் வெடித்தது.
வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் இரு சமூகங்களிடையேயான மோதலாக இது மாறியது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இம்மோதல்களில் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பல இடங்களில் 144 உத்தரவு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 45 கம்பெனி துணை ராணுவத்தினர் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையால் வீடுகளை இழந்து, கடைகளை இழந்து., வாகனங்களை இழந்து, வாழ்வாதாரத்தையும், உயிரையும் இழந்து மக்கள் பரிதவிக்கிறார்கள்.
ஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்!
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அத்துடன் காயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்களின் சிகிச்சைக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு 5லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வன்முறை பாதித்த பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்க அறிவுறுத்தி உள்ளார்.
வன்முறை தொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி வன்முறை தொடர்பாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேநேரம் ஆம் ஆத்மி கட்சி நபரும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.