விடமாட்டோம்.. எங்களை தாண்டி உள்ளே போகட்டும்.. இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்ற தலித்துகள், சீக்கியர்கள்
சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களால் டெல்லியே மொத்தமாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.
டெல்லி: சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களால் டெல்லியே மொத்தமாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதற்கு மத்தியில் டெல்லியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக பல பகுதிகளில் உதவிக் கொண்டு இருக்கிறார்கள்.
Recommended Video
டெல்லியில் இத்தனை நாட்கள் அமைதியாக நடந்து வந்த சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது. நேற்று முதல் நாள் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் விடாமல் நடந்து வருகிறது. இந்த கலவரம் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டனர். இதில் 18 பேர் இஸ்லாமியர்கள். இதில் போலீஸ் கான்டஸ்டிபிள் ஒருவரும் கொல்லப்பட்டார். போலீஸ் துணை கமிஷ்னர் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.
எங்கு கலவரம் நடக்கிறது
டெல்லியில் வடகிழக்கு பகுதியில்தான் தீவிரமாக கலவரம் நடந்து வருகிறது. டெல்லியின் மற்ற பகுதிகளுக்கும் இந்த கலவரம் பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். நேற்று முதல்நாள் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் ஜாபர்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடந்து வருகிறது.
யமுனா விஹார் ஒற்றுமை
ஆனால் கலவரத்திற்கு மத்தியிலும் டெல்லியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக பல பகுதிகளில் உதவிக் கொண்டு இருக்கிறார்கள். பல இடங்களில் இந்துக்களை இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்களை இந்துக்களும் காப்பாற்றி இருக்கிறார்கள். முக்கியமாக டெல்லியின் யமுனா விஹார் பகுதி மத ஒற்றுமைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் வசிக்கிறார்கள்.
சோதனை
இந்த மத கலவரம் குறித்து கருத்து தெரிவித்த யமுனா விகார பகுதி மக்கள், நாங்கள் 34 வருடமாக ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்கு மத ரீதியான பிரச்சனைகள் வந்தது இல்லை. ஆனால் இப்போது வெளியே பிரச்சனை நடக்கிறது. நாங்கள் உள்ளுக்குள்ளே ஒற்றுமையாக இருக்கிறோம் . கலவரம் செய்யும் நபர்களை நாங்கள் உள்ளே அனுமதிக்க மாட்டோம். இதற்காக இரவு முழுக்க நாங்கள் எங்கள் பகுதிக்கு வெளியே காவல் காக்கிறோம்.
காவல் எப்படி
கலவரக்காரர்கள் யாரும் உள்ளே வராமல் இருக்கும் வகையில் இரவு முழுக்க நாங்கள் காவல் காத்து வருகிறோம். இந்துக்கள், முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம். எங்கள் நட்பை கெடுக்கும் வகையில் நாங்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டோம். அதேபோல் நாங்கள் எங்களுக்கு அருகே இருக்கும் பகுதிகளில் காயம் அடைந்த மக்களையும் காப்பதற்காக இரவில் ரோந்து பணிகளை மேற்கொள்கிறோம், என்று குறிப்பிட்டுள்ளனர்.
தலித் மக்கள்
அதேபோல் டெல்லியில் சீலாம்பூர் பகுதியில், தலித் மக்கள் அங்கு இருக்கும் இசுலாமியர்களை பாதுகாத்து வருகிறார்கள். அந்த பகுதியில் நிறைய தலித் மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். இந்த இஸ்லாமியர்களை இந்து மதக்கலவரக்காரர்கள் தாக்காத வண்ணம், அவர்களை அரண் போல தலித் மக்கள் காத்து இருக்கிறார்கள். இதனால் இரவு முழுக்க தூங்காமல் அவர்கள் பாதுகாப்பு பணிகளை செய்துள்ளனர். அவர்களின் இந்த செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
செம ஒற்றுமை
இன்னொரு பக்கம், டெல்லியில் இருக்கும் சீக்கியர்கள் தங்கள் வீடுகளிலும், குருத்வாராக்களிலும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்க இடம் கொடுத்துள்ளனர். நேற்று லலிதா பார்க் பகுதியில் இந்துக்கள், சீக்கியர்கள் ஒன்றாக சேர்ந்து இஸ்லாமிய வீடுகள் கடைகளை பாதுகாத்தனர். அதேபோல் ரமேஷ் பார்க் காலி பகுதியில் இந்துக்கள், சீக்கியர்கள் ஒன்றாக சேர்ந்து இஸ்லாமிய வீடுகள் கடைகளை இரவு முழுக்க பாதுகாத்தனர்.