டெல்லி வன்முறை.. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்
டெல்லி: டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் இப்பிரச்சினைக்கு மனிதாபிமானத்தோடு தீர்வு கண்டிடவும் - எதிர்க்கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தவும், அமைதி குழுக்கள் அமைக்கவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் குடியரசுத் தலைவரிடம் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை.மனு அளித்துள்ளன.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது தாக்குதல் குறித்து மனிதாபிமானத்தோடு தீர்வு கண்டிடவும் - எதிர்க்கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தவும் - அமைதி குழுக்கள் அமைக்கவும் அனுமதிக்க வேண்டுமென தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்து எழுதிய கடிதம் பின்வருமாறு:-
மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் அவர்களே, "இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் தங்களைச் சந்தித்து டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு, ஏறத்தாழ 37 பேர் மரணமடையவும் - 200 பேருக்கு மேல் படுகாயமடையவும் உள்ள நிலையில், இதுகுறித்து எங்கள் கவலையையும் - அக்கறையையும் தங்களுக்குத் தெரிவிக்க நேரம் கேட்டிருந்தோம்.
ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டு, அவர்களுடைய உடைமைகள் எரிக்கப்பட்டு, அடிப்படை வாழ்வதாரத்தையே இழந்து நிற்கிறார்கள். இத்தகைய கொடுமை ஒரு ஆயுமேந்திய நாசகார கும்பல், அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தவர்கள் துணையுடன் நடத்திய தாக்குதலின் விளைவாக ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயக குடியரசான இந்தியாவில் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை எங்களால் உங்களை சந்திக்க இயலாது என்று தகவல் செய்தி கிடைத்தவுடன், இந்த கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறோம்.
1) டெல்லியில் அமைதியை ஏற்படுத்துவதற்கும் உரிய உத்தரவை, தங்களுடைய நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி துணைநிலை ஆளுநர் உட்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அறிவுறுத்தி, உடனடியாக அங்கே சகஜ நிலை திரும்பிட உத்தரவிட வேண்டும். மேலும், வெறுப்பு பேச்சுகளின் மூலம் மக்களை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியவர்கள்மீது உடனடியாக குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2) வீடிழந்த மக்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பும் - தங்கும் வசதிகளும் செய்து தந்து, அவர்களைக் காப்பாற்றிட வேண்டும்.
3) இக்கலவரத்தில் மரணமடைந்தோர் மற்றும் படுகாயமடைந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
4) வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தோருக்கும் - கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
5) அமைதியை ஏற்படுத்துவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கும் - அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, போராடுகிற மக்களை சமாதானப்படுத்துவதற்கும் - அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு குழு அமைப்பதற்கு எங்களுக்கு அனுமதி தர வேண்டும்.
6) இந்த போராட்டங்கள், பல பேருடைய உள்ளப்பூர்வமான பாதிப்பை, குறிப்பாக குழந்தைகளுக்கு பெரும் அச்சத்தையும் - அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிற காரணத்தால், அவர்களுக்கென்று ஒரு சிகிச்சை மையங்கள் அமைத்து, அக்குழந்தைகளின் அச்சத்தையும், அதிர்ச்சியையும் போக்கிட சிகிச்சை அளித்திட வேண்டும்.
மேற்சொன்ன இப்பிரச்சினைகளுக்கு மனிதாபிமானத்தோடு தீர்வு கண்டிடவும் - எதிர்க்கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தவும் - அமைதி குழுக்கள் அமைக்கவும் மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, தொடர்புடைய அதிகாரிகள் அனுமதி அளித்திட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சீத்தாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரஃபுல் படேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் பேராசிரியர் மனோஜ்குமார், ஆம் ஆத்மி சார்பில் சஞ்சங் சிங் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் யாதவ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.