ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்
டெல்லி: வகுப்பு வாத வன்முறைகள் தொடர்பாக டெல்லி கஜூரி காஸில் உள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் தொழிற்சாலைக்கு டெல்லி போலீசார் சீல் வைத்திருக்கிறார்கள். அத்துடன் அவர் மீது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக வழக்கும் பதிவு செய்துள்ளார்கள்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும், டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. வட கிழக்கு டெல்லி பகுதியில் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த சில இரு தினங்களில் மட்டும் இந்த கலவரங்களில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சாக்கடையில் பிணம்
சாந்த் பக் ஏரியாவில், அங்கித் சர்மா என்ற 26 வயதான நபர் கல்வீசி கொல்லப்பட்டு, சாக்கடைக்குள் வீசப்பட்டு கிடந்தார் இவர், மத்திய உளவுத்துறையில், டிரைவர் பணியில் இருந்தவர். இந்த நிலையில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகிர் ஹுசைனுக்கு, இந்த கொலையில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவரது வீட்டுக்கு அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் இருந்துதான் அங்கித் சர்மா சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கற்கள் வீசுவது
இது ஒரு புறம் எனில் மற்றொரு சர்ச்சையிலும் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகிர் ஹுசைன் சிக்கினார். அவரது வீட்டின் மாடியிலிருந்து, பெட்ரோல் குண்டுகள், கற்கள் சிலரால் வீசப்படுவது போன்ற வீடியோ வெளியாகியது. அதில் சிவப்பு ஸ்வெட்டர் போட்டபடி தாகிர் ஹுசைன் நிற்கிறார். கற்குவியல், பெட்ரோல் குண்டுகள் அவர் வீட்டு மொட்டை மாடியில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.
சந்தேக வழக்கு
இதற்கிடையில் தாஹிர் உசேன் தான் நிரபராதி என்று கூறி, காவல்துறையினரை அழைத்து நிலைமையை கட்டுப்படுத்த உதவி கோரினார். இந்த நிலையில் தான் டெல்லி கஜூரி காஸில் உள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் தொழிற்சாலைக்கு டெல்லி போலீசார் சீல் வைத்திருக்கிறார்கள். அத்துடன் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை தொடர்பாக தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
ஜாவேத் அக்தர் தாக்கு
இதற்கிடையில், கவிஞரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் கலவரங்களுக்கு இடையே டெல்லி காவல்துறையை விமர்சித்துள்ளார், "பலர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர், பல வீடு எரிக்கப்பட்டது, பல கடைகளை சூறையாடியது பலரை ஆதரவற்றவர்களாக மாற்றியது, ஆனால் போலீசார் ஒரு வீட்டை மட்டுமே சீல் வைத்துள்ளளார்கள். தற்செயலாக அவரது பெயர் தாஹிர். டெல்லி காவல்துறையின் நிலைத்தன்மைக்கு வணக்கம். " என்று பதிவிட்டுள்ளார்.