வீடியோ பாருங்கள்.. சொலிசிடர் ஜெனரலே நடுங்கிய நொடி.. மத்திய அரசை விளாசிய நீதிபதி முரளிதர்.. தமிழர்!
டெல்லி கலவரம் குறித்து டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை நடத்தும் நீதிபதி முரளிதர் கவனம் ஈர்த்து இருக்கிறார்.
டெல்லி: டெல்லியில் நடந்து வரும் கலவரம் குறித்து இன்று டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை நடத்திய நீதிபதி முரளிதர் அதிக கவனம் ஈர்த்து இருக்கிறார். இந்த கலவரத்தில் டெல்லி போலீசை நீதிபதி முரளிதர் கடுமையாக விமர்சனம் செய்தார். நீதிபதி முரளிதர் பற்றிய விவரங்கள் மலைக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.
டெல்லியில் நேற்று முதல் நாள் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்து வருகிறது.
இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த பெரும் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது.
என்ன உத்தரவு
இந்த நிலையில் டெல்லி கலவரத்திற்கு எதிரான வழக்கு நேற்று டெல்லி ஹைகோர்ட்டில் இரவோடு இரவாக விசாரிக்கப்பட்டது. டெல்லி வன்முறைகளில் படுகாயமடைந்து வடகிழக்கு முஸ்தாபாத் அல் ஹிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை பாதுகாப்பாக வேறு மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்றம் நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பிறப்பித்தது ஹைகோர்ட் நீதிபதி முரளிதர், ஏஜே பாம்பானி அமர்வுதான்.
யார் அமர்வு
அதோடு இந்த வழக்கை இன்று விசாரிப்போம் என்று நீதிபதி முரளிதர் குறிப்பிட்டு இருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதி முரளிதரன் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடக்கத்தில் இருந்தே முரளிதர் இன்று மிகவும் கடுமையாக பேசினார். முதலில் இந்த வழக்கு முரளிதர் முன்னிலையில் விசாரணைக்கு வருவதையே மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எனக்கு வேறு வழக்கு இருக்கிறது. நான் அதில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நேரம் கேட்டார்
இன்று எப்படியாவது வழக்கை ஒத்தி வைத்தால், நாளை அதை டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி விசாரிப்பார். முரளிதருக்கு நாளை வேறு வழக்கு இருப்பதால் அவரின் அமர்வு இதை விசாரிக்காது என்று திட்டமிட்டு சொலிஸ்டர் ஜெனரல் நேரம் கேட்டு இருந்தார். ஆனால் உங்களால் ஆஜராக முடிந்தால் ஆஜராகுங்கள், இல்லையென்றால் வேறு அரசு தரப்பு வழக்கறிஞரை ஆஜர் படுத்துங்கள். இன்று கண்டிப்பாக விசாரணை நடக்கும் என்று முரளிதர் உறுதியாக கூறிவிட்டார்.
கண்டித்தார்
அப்போதே மத்திய அரசை அவர் கண்டித்து இருந்தார். அதன்பின் இன்று மதியம் 12.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நடைபெறும்போது நீதிமன்றத்தில் போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். அதன்பின் மதியம் போலீஸ் கமிஷ்னர் ஆஜரான பின் நடந்த வழக்கு விசாரணையிலும் முரளிதர் கடுமையான கேள்விகளை கேட்டார்.
கடுமையான கேள்வி
அதில், பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் போன்றவர்களின் பேச்சுகளால்தான் வன்முறை வெடித்ததாக புகார் உள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோரின் வீடியோவை போலீஸ் பார்த்ததா, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது. இதற்கு டெல்லி போலீஸ் தரப்பும், உள்துறை அமைச்சகம் தரப்பும் அப்படிபட்ட வீடியோக்களை பார்க்கவில்லை என்று கூறியது.
முரளிதர் கோபம்
இதை கேட்ட நீதிபதி முரளிதர், நீங்கள் சீரியஸாக பேசுகிறீர்களா? உண்மையில் அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்டனர். இதையடுத்து இன்று ஹைகோர்ட்டில் அந்த வீடியோவை ஒளிபரப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பின் துஷார் மேத்தா முன்னிலையில் இந்த வீடியோவை நீதிபதி முரளிதர் ஒளிபரப்பினார். இந்த வீடியோ ஒளிபரப்பிற்கு பின் போலீஸ், கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை கேட்டனர்.
செம பயம்
இந்த வீடியோவை பார்த்ததும் அரசு வழக்கறிங்கர் துஷார் மேத்தா நடுங்கிப் போனார். பாஜக தலைவர் இப்படி பேசியது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று மேத்தா குறிப்பிட்டார். நீதிபதி முரளிதர் எதை செய்வார் என்று மேத்தா பயந்தாரோ அதையே இன்று முரளிதர் சிறப்பாக செய்து முடித்தார். நீதிபதி முரளிதர் பாஜக தலைவரின் வீடியோவை இப்படி ஒளிபரப்பியது பெரிய திருப்பதை ஏற்படுத்தியது. இவர் மிகவும் ஸ்டிரிக்ட்டான நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இவர்
ஆம் நீதிபதி முரளிதரை பலமுறை டெல்லி ஹைகோர்ட்டில் இருந்து மாற்ற மத்திய அரசு சார்பாக முயற்சிகள் நடந்தது. கொலிஜியம் கூட இதற்கு சிலமுறை ஒப்புக்கொண்டது. இவரை எப்படியாவது சண்டிகர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று தீவிரமாக முயற்சிகள் நடந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் முரளிதர் பணியிட மாற்றம் கடைசியில் கைவிடப்பட்டது.
முக்கிய வழக்கு
தன்னுடைய 13 வருட நீதிபதி அனுபவத்தில், முரளிதர் பல முக்கியமான வழக்குகளை சந்தித்து இருக்கிறார். முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார். 1984 சீக்கிய எதிர்ப்பு கலவரம், உத்தர பிரதேச ஆயுத சட்ட வழக்கு, எல்ஜிபிடி உடல் உறவு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்தை ஆர்டிஐ மூலம் தெரிந்து கொள்வது தொடர்பான வழக்கு என்று பல வழக்குகளில் இவர் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
மிக முக்கியமான நபர்
தன்னை மை லார்ட், யுவர் லார்ட்ஷிப் என்று அழைப்பதை இவர் ஒரு போதும் விரும்பியது இல்லை. அதேபோல் பீமா கோர்கான் வழக்கில் சிலர் தவறாக கைது செய்யப்பட்டதை முரளிதர் கண்டித்து உத்தரவிட்டு இருந்தார். போபால் விஷ வாயு வழக்கில், இவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞராக ஆஜர் ஆனார். அதில் அவர்களுக்கு நீதியும் பெற்றுத்தந்தார். இவர் மொத்தம் 3100 வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
தமிழர் இவர்
முரளிதர் சென்னையை சேர்ந்த தமிழர் என்பது கூடுதல் சிறப்பு. 2023ல் இவர் ஓய்வு பெறுகிறார். இவர் 1984ல் இருந்து வழக்கறிஞராக இருக்கிறார். முதலில் சென்னை ஹைகோர்ட், பிறகு டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தார். தற்போது டெல்லி ஹைகோர்ட் நீதிபதியாக உள்ளார். மிகவும் நேர்மையான நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.