டெல்லி கலவரம்.. ஜேஎன்யூ மாணவர் சர்ஜீல் இமாம் உபா சட்டத்தின் கீழ் கைது.. தேச துரோக வழக்கு!
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிஎச்டி ஆய்வு மாணவர் சர்ஜீல் இமாம் டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு மூலம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது உபா சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிஎச்டி ஆய்வு மாணவர் சர்ஜீல் இமாம் நாடு முழுக்க பல்வேறு போராட்டங்களை கடந்த இரண்டு வருடமாக நடத்தி வருகிறார். டெல்லியில் நடந்த சிஏஏ போராட்டம், காஷ்மீர் சிறப்பு அதிகார நீக்க எதிர்ப்பு போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை இவர் முன்னின்று நடத்தினார்.
இந்த நிலையில் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் கலவரத்தை தூண்டியதாக கூறி, இவர் மீது டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் எனப்படும் உபா சட்டத்தை பதிவு செய்தனர். அசாமில் இருந்த இவர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது தேச துரோக பிரிவின் கீழும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் இவர் செயல்பட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, பாசிச சட்டம் என்று கூறி அதற்கு இவர் களங்கம் ஏற்படுத்துவிட்டார் என்றும் இவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மமதா, உத்தவ் உட்பட பல மாநில முதல்வர்கள் உடன் இன்று திடீர் ஆலோசனை.. சோனியா அதிரடி திட்டம்.. பின்னணி!
டெல்லி கொண்டு வரும் முன் இவர் சிஏஏ போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கவுகாத்தி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கும் அங்கே கடந்த ஜூலை 21ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. 31 வயதாகும் இவர் கடந்த ஜனவரி மாதம் இதே போல் டெல்லி போலீஸ் மூலம் கைது செய்யப்பட்டார். மத கலவரத்தை உண்டாக்குகிறார் என்று கூறி இவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் அசாமை இந்தியாவில் இருந்து பிரித்து கொண்டு செல்ல போவதாக இவர் அறிவித்ததை எதிர்த்தும் போலீசில் புகார் உள்ளது. கடந்த டிசம்பர் 15 தேதி இதேபோல் இவர் கைது செய்யப்பட்டார். டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக கலவரத்தை இவர் தூண்டி விட்டதாக கூறி கைது செய்யப்பட்டார்.
தற்போது மீண்டும் டெல்லி கலவரத்தை சுட்டிக்காட்டி, இவர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.