அமித் ஷா பதவி விலக வேண்டும்.. எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை, மாநிலங்களவை இரண்டும் ஒத்திவைப்பு!
டெல்லி கலவரம் காரணமாக இன்று கூடிய மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரிய அளவில் அமளி ஏற்பட்டது.
டெல்லி: டெல்லி கலவரம் காரணமாக இன்று கூடிய மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரிய அளவில் அமளி ஏற்பட்டது. இதனால் இரண்டு அவையையும் ஒத்திவைத்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை சபாநாயகர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டனர்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கூடியது. இந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் கடந்த மாதம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் அவை கூடியுள்ளது.
எப்போது வரை
இன்று தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை அவை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெற்றது. டெல்லி கலவரம்தான் இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய இடம் பிடித்தது. டெல்லி கலவரத்தில் 46 பேர் பலியானது குறித்தும், பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சு குறித்தும் இன்று விவாதிக்க வேண்டும் என்று அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தது.
என்ன கோரிக்கை
இதில் அவை தொடங்கும் முன்பே நாடாளுமன்றத்திற்கு வெளியே பரபரப்பு தொற்றிக்கொண்டது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே காந்தி சிலைக்கு அருகில் போராட்டம் செய்தனர். அதேபோல் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடி கோஷம் எழுப்பினார்கள். திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கண்களை மூடிக்கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.
பதவி விலகல்
இன்னொரு பக்கம் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் கட்சி உட்பட மொத்தம் 23 கட்சிகள் நோட்டீஸ் அனுப்பியது. திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அமித் ஷாவிற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இன்று இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடும் அமளியுடன் தொடங்கியது.
டெல்லி கலவரம்
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுப்பட்டனர். அவைக்கு முன்பாக வந்து கோஷங்களை எழுப்பினார். இதனால் அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி வெறும் 6 நிமிடத்தில் அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2 மணி வரை அவையை ஒத்திவைத்து, சபாநாயகர் உத்தரவிட்டார் .
ராஜ்யசபா அதே நிலை
அதேபோல் இன்னொரு பக்கம் ராஜ்யசபாவிலும் எம்பிக்கள் அமளியில் ஈடுப்பட தொடங்கினார்கள். டெல்லி போராட்டம் குறித்து விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதனால் ராஜ்ய சபாவை மத்திய 2 வரை ஒத்திவைத்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். அதன்பின் இரண்டு அவை மீண்டும் தொடங்கிய போதும் அமளி ஏற்பட்டது. கடைசியில் மொத்தமாக இரண்டு அவையும் அமளி காரணமாக நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.