நம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்
டெல்லி: டெல்லி வன்முறை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியில் நடந்த சம்பவங்கள் ஆழ்ந்த கவலைக்குரியவை, வெட்கக்கேடானவை என்று வேதனை தெரிவித்தார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் அரசு தோல்வி அடைந்துவிட்டதை இது காட்டுகிறது என்றார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரானவர்களுக்கும், ஆதரவானவர்களுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 23ம் தேதி தொடங்கிய வன்முறை வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பயங்கரமாக பரவியது.
வன்முறை கும்பலின் கோரதாக்குதலுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயரிழந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? .. வைரமுத்து
திட்டமிட்டு வன்முறை
டெல்லி வன்முறை விவகாரத்தில் அம்மாநில போலீசார் உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சனை ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டிருக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த வன்முறையை தடுக்க தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். துணை ராணுவத்தை உடனே அழைக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் குழு
இந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்த காங்கிரஸ் இடைக் காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடங்கிய குழு அவரிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தது. பின்னர் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, மத்திய அரசால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே இந்த சூழ்நிலை பிரதிபலிக்கிறது என்றார். குறிப்பிட்டார்.
மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அப்போது பேசுகையில், "நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த நான்கு நாட்களாக நடக்கும் சம்பவங்கள் ஆழ்ந்த கவலைக்குரியவை, வெட்கக்கேடானவை. நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு தோல்வி அடைந்ததை நடக்கும் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன" என்று கூறினார்.
பாஜகவுக்கு நெருக்கடி
டெல்லியில் நடந்து வரும் வன்முறை சம்வங்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்வினை ஆற்றி வருகிறது. அமித் ஷாவுக்கு தொடர் நெருக்கடி அளிக்கும் விதமாக குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளது. முன்னதாக நேற்று காங்கிரஸ் கட்சி அமைதிப் பேரணியும் நடத்தியது. டெல்லி விவகாரம் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியாக உள்ளது.