டெல்லி வன்முறை.. பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்
ஹைதராபாத்: டெல்லியில் வன்முறைக்கு காரணமாக பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்று கோரி ஹைதராபாத்தில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வன்முறையில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக டெல்லி ஷாஹீன்பாக்கில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜப்ராபாத் பகுதியிலும் போராட்டங்கள் வெடித்தது. இதற்கு எதிராக சிஏஏ ஆதரவு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் கலவரமாக மாறி உள்ளது.
கடந்த இரு தினங்களில் மட்டும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி கலவரக்கார்கள் சூறையாடி உள்ளார்கள். கண்ணில் படுபவர்களை எல்லாம் தாக்கும் மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது. சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டள்ளன. இந்த மோதலில் 100க்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்
நாட்டில் இன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்
இந்நிலையில் பாஜக எம்பி கபில் மிஸ்ரா, சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக பேசியது தான் வன்முறைக்கு வித்திட்டதாக புகார் எழுந்துள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து ஹைதராபாத்தில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக மாணவர்க்ள வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். போராட்த்திற்கு அழைப்பு விடுத்துள்ள இந்த மாணவர்கள், டெல்லியில் வன்முறைக்கு காரணமான பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.