10 மணி நேரம்.. தேதியே இல்லாமல் வந்த ஆர்டர்.. நீதிபதி முரளிதர் டிரான்ஸ்பருக்கு பின் என்ன நடந்தது?
டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் பணியிட மாற்றத்திற்கு பின் என்ன நடந்தது, நேற்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் என்ன நடந்தது என்று விவரம் வெளியாகி உள்ளது.
டெல்லி: டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் பணியிட மாற்றத்திற்கு பின் என்ன நடந்தது, நேற்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் என்ன நடந்தது என்று விவரம் வெளியாகி உள்ளது.
டெல்லியில் ஏற்பட்ட கலவரம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடந்தது.இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 34 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று டெல்லி கலவரத்திற்கு எதிரான வழக்கை டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் விசாரித்தார். இவர் பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர்.. உத்தரவிட்ட நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹைகோர்டுக்கு அதிரடியாக இடமாற்றம்
நேற்று எப்படி
நேற்று இந்த வழக்கு விசாரணை முடிந்து 10 மணி நேரத்தில் இந்த டிரான்ஸ்பர் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின் படி நீதிபதி முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். ஆனால் இந்த பணியிட மாற்றம் இப்போது திட்டமிடப்பட்டது இல்லை. பிப்ரவரி 12ம் தேதியே இதற்கான முடிவை நீதிமன்ற கொலிஜியம் எடுத்துவிட்டது. ஆனால் அப்போது கொலிஜியத்தில் இருந்த 5 நீதிபதிகள் இந்த முடிவை எதிர்த்தனர்.
என்ன ஆலோசனை
அதனால் அப்போது பணியிட மாற்றம் நடக்கவில்லை. அதன்பின் மீண்டும் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வேறு விஷயங்கள் குறித்து கொலிஜியத்தில் பேசப்பட்டுள்ளது. அதன்படி பஞ்சாப் ஹரியானா ஹைகோர்ட் தலைமை நீதிபதி ரவி சங்கர் ஜா உச்ச நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்படுவது குறித்து ஆலோசித்து இருக்கிறார்கள். ரவி சங்கர் ஜா உச்ச நீதிமன்றம் சென்றால், ஏற்கனவே நிறைய காலியிடம் இருக்கும் பஞ்சாப் ஹரியானா ஹைகோர்ட்டில் கூடுதல் காலியிடம் உருவாகும்.
என்ன கட்டாயம்
இதனால் அங்கு மூத்த நீதிபதிகளை நியமிக்க வேண்டும். அதேபோல் ரவி சங்கர் ஜா 2023ல் ஓய்வு பெறுவதால் அவரை கண்டிப்பாக எப்படியாவது உச்ச நீதிமன்றத்திற்கு வயதின் அடிப்படையில் மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது என்று விவாதித்து இருக்கிறார்கள். இதனால்தான் முரளிதரை பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த முறை முரளிதர் மாற்றத்திற்கு கொலிஜியத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
என்ன கடிதம்
இதற்கான கடிதம் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த கடிதம் எப்போது சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பட்டது, நேற்றா அதற்கு முன்பேவா? என்பது குறித்த விவரம் மட்டும் புதிராக உள்ளது. இதையடுத்து இந்த பரிந்துரை கடிதத்தை ஏற்றுக்கொண்டு நீதிபதி முரளிதரை நேற்று இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்துள்ளனர். இவருடன் நீதிபதி ரஞ்சித் வி மேகாலயாவிற்கும், நீதிபதி ரவி வி மலிமாத் உத்தரகாண்டிற்கும் மாற்றப்பட்டுள்ளார்.
அடுத்த விசாரணை
நேற்று நீதிபதி முரளிதர், டெல்லி கலவர வழக்கை விசாரிப்பதாக இல்லை. முதலில் டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி டிஎன் பட்டேல் இதை விசாரிப்பதாக இருந்தது. ஆனால் பட்டேல் விடுப்பு எடுத்த காரணத்தால் நேற்று முரளிதர் அமர்வுக்கு இந்த வழக்கு சென்றது. தற்போது பணியிட மாற்றம் காரணமாக இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் முரளிதர் இருக்கிறார். இதற்கு நிறைய காரணம் உள்ளது.
தேதி இல்லை
நீதிபதி முரளிதருக்கு அளிக்கப்பட்ட டிரான்ஸ்பர் கடிதத்தில், எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை. பொதுவாக இதில் தேதி குறிப்பிடப்படுவது வழக்கம். அல்லது இத்தனை நாட்களுக்குள் பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் இந்த கடிதத்தில் அப்படி தேதி எதுவும் இல்லை. இதன் அர்த்தம் உடனடியாக இடமாறுதல் செய்ய வேண்டும் என்பதாகும்.
அவசரம்
அதாவது இன்றே, நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா ஹைகோர்ட்டிற்கு இடமாறுதல் செய்ய வேண்டும். அவசர அவசரமாக எடுத்த முடிவு காரணமாக இப்படி கடிதம் அனுப்பி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். பிப்ரவரி 12ம் தேதியே பணியிட மாறுதலுக்கு பரிந்துரை செய்யப்பட்டும், அரசு இத்தனை நாள் அதில் முடிவு எடுக்கவில்லை. மாறாக நேற்று மதியம் இரண்டு மணியில் இருந்து இரவு 12 மணிக்குள் அவசர அவசரமாக இந்த பணியிட மாற்ற முடிவை சட்ட அமைச்சகம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.