கடைசி தீர்ப்பு.. நீங்க எங்க ரோல் மாடல்.. நீதிபதி முரளிதருக்கு உருக்கமான விடை தந்த டெல்லி ஹைகோர்ட்!
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி முரளிதருக்கு நேற்று டெல்லி ஹைகோர்ட்டில் மிகவும் உருக்கமான விடைகொடுக்கப்ட்டது.
டெல்லி: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி முரளிதருக்கு நேற்று டெல்லி ஹைகோர்ட்டில் மிகவும் உருக்கமான விடைகொடுக்கப்ட்டது.
கடந்த இரண்டு நாட்களாக நடந்த டெல்லி கலவரத்தில் மொத்தம் 34 பேர் பலியானார்கள். இந்த நிலையில் நேற்று டெல்லி கலவரத்திற்கு எதிரான வழக்கை டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் விசாரித்தார். இவர் பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிய உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மத்திய அரசுக்கு எதிராக பேசி சில மணி நேரங்களில் முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
டெல்லி ஹைகோர்ட்
இந்த நிலையில் டெல்லி ஹைகோர்ட்டில் நேற்று நீதிபதி முரளிதருக்கு மிகவும் உருக்கமான விடைகொடுக்கப்ட்டது. நேற்று முரளிதர் கடைசியாக சொத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கினார். நீதிபதி காமேஸ்வர் ராவ், முரளிதர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதன்பின் வெளியே வந்தவரிடம் நீதிமன்ற பணியாளர் ஒருவர் கடிதத்தை அளித்தார். அதுதான் அவரின் இடமாற்ற கடிதம்.
வழக்கு விசாரணை
இதையடுத்து அங்கிருந்த இளம் வழக்கறிஞர்கள் பலர் நேரடியாக முரளிதரிடம் வந்து காலையில் நடந்த வழக்கு விசாரணை குறித்து பேசினார்கள். கபில் மிஸ்ராவின் வீடியோவை அவர் ஒளிபரப்பியது குறித்து வழக்கறிஞர்கள் பெருமையாக பேசினார்கள். நீங்கள் மிகவும் அதிரடியாக செயல்பட்டீர்கள்.நீங்கள் எங்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள் என்று குறிப்பிட்டனர்.
நன்றி சொன்னார்
இதையடுத்து நீதிபதி முரளிதர், நன்றி, நான் இப்போது கடைசியாக வழங்கிய தீர்ப்புதான் டெல்லி ஹைகோர்ட்டில் நான் இறுதியாக கொடுக்கும் தீர்ப்பு. நான் இனி பஞ்சாப் ஹரியானா ஹைகோர்ட்டில் பணியாற்றுவேன் என்று கூறினார். இதையடுத்து அவரை கட்டிப்பிடித்தும், கை கொடுத்தும் பலர் அவருக்கு விடை கொடுத்தனர். அவர் விசாரித்த டெல்லி கலவர வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டது.
டெல்லி கலவர வழக்கு
இன்று டெல்லி தலைமை நீதிபதி டிஎன் பட்டேல், சி ஹரிசங்கர் முன்னிலையில் டெல்லி கலவர விசாரிக்கப்பட்டது. இதில் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது போது நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசு தரப்பு சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். இதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்து வழக்கை அடுத்த ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். முன்னதாக நீதிபதி முரளிதர் இன்றே கபில் சர்மா உட்பட்டோர் மீது எப்ஐஆர் தொடுக்க உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.