3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு.. டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள்.. நவ.26ல் மாபெரும் போராட்டம்!
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த இருக்கும் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் வரும் 26ம் தேதி மாபெரும் விவசாய போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் 3 விவசாயிகள் சட்டம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) சட்டம், 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம் , 2020 ஆகிய சட்டங்கள் பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது.
கொரோனாவிற்கு எதிராக பெரிதும் நம்பப்பட்ட மருந்து.. ரெமிடிஸ்வரை லிஸ்டிலிருந்து நீக்கிய ஹு.. பின்னணி!
எதிர்ப்பு
இந்த சட்டங்கள் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட போதே அதை பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் விவசாயிகள் கடுமையாக எதிர்த்து போராட்டம் செய்தனர். அதேபோல் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்த ஷிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
விவசாய போராட்டம்
இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த இருக்கும் இந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் வரும் 26ம் தேதி மாபெரும் விவசாய போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏஐகேஎஸ்சிசி எனப்படும் அகில இந்திய கிஸான் சங்கார்ஷ் கூட்டமைப்பு (All India Kisan Sangharsh Coordination Committee - AIKSCC) சங்கம் சார்பாக இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
22 மாநில விவசாயிகள்
மொத்தம் 427 விவசாய அமைப்புகள் நாடு முழுக்க இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியனாவில் தற்போது நடந்து வரும் போராட்டத்தின் நீட்சியாக இந்த போராட்டம் இருக்க போகிறது. இந்த போராட்டத்தில் பல்லாயிரம் விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். உத்தர பிரதேசம், பஞ்சாப்,ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என 22 மாநில விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
பேரணி
டெல்லியில் 26ம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக இதற்கு அனுமதி கிடைக்காத நிலையில் தங்கள் மாவட்டங்களில் இருந்து டெல்லியை நோக்கி இவர்கள் பேரணியாக செல்ல உள்ளனர். தங்கள் மாநிலங்களில் இருந்து பல்வேறு தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் பேரணியாக செல்ல உள்ளனர்.
போராட்டம்
இவர்கள் 26-27ம் தேதி டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. அப்படி நிறுத்தப்பட்டால் இவர்கள் டெல்லி எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் 7-10 நாட்கள் போராட்டம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம், எங்களின் கோரிக்கையை கேட்கும் வரை சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று விவசாய அமைப்பினர் கூறியுள்ளனர்... இதனால் டெல்லியை இணைக்கும் சாலைகளில் 26-27 தேதிகளில் பெரிய போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.