இந்தியாவில் வேகமாக பரவிய டெல்டா வகை.. உருமாற்றமடைந்து டெல்டா ப்ளஸ் ஆனது.. தீவிர ஆபத்தை ஏற்படுத்துமா?
டெல்லி: இந்தியாவில் அதிக வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனா மேலும் உருமாற்றமடைந்து டெல்டா + கொரோனா( AY.1′) வகையாக உருமாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரசை இன்னும் எந்த நாட்டினாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. வளர்ந்த வல்லரசு நாடுகள்கூட கொரோனா பரவலால் பெரும் இன்னலை எதிர்கொண்டு வருகின்றன.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதே வைரஸ் பரவல் அதிகரிக்க முக்கிய காரணம் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். இதனால் வைரஸ் பரவல் வேகம் மட்டுமின்றி, உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கொரோனா 2ஆம் அலை
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருக்க இந்தியாவில் பரவிய டெல்டா கொரோனா வகையே (B.1.617.2) முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலையில், டெல்டா கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்து டெல்டா + (B.1.617.2.1) கொரோனா வகையாக உருமாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா + கொரோனா
இருப்பினும், இந்த டெல்டா + கொரோனா வகை நோயின் தீவிர தன்மை அதிகரிக்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். AY.1 என்று ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் இந்த டெல்டா + கொரோனா, K417N பிறழ்வு காரணமாக ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதாவது கொரோனா வைரசின் வெளிப்புறத்தில் இருக்கும் புரோத ஸ்பைக்கில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அச்சம் வேண்டாம்
இருப்பினும், இந்த டெல்டா + வகை கொரோனாவால் பெரிய பாதிப்புகள் இல்லை. இந்த வகை தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவவில்லை. தற்போது வரை வெறும் 6 மாதிரிகளில் மட்டுமே இந்த டெல்டா+ கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் இந்த வகை கண்டறியப்பட்டுள்ளது.
ஆன்டிபாடி காக்டெய்ல்
இந்த உருமாறிய டெல்டா + கொரோனா வகை தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. இருப்பினும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சைக்கு இந்த வகை கொரோனா பெரிய பலன் அளிக்காமல் போகலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் Casirivimab & Imdevimab ஆன்டிபாடி காக்டெய்ல் விலை 59,750 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் கூறுவது என்ன
இந்த டெல்டா ப்ளஸ் கொரோனா குறித்து நோயெதிர்ப்பு நிபுணர் வினீதா பால் கூறுகையில், ஆன்டிபாடி காக்டெய்லின் செயல்திறன் குறையலாம். இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் நம்மால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. முதலில் இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிறதா இல்லையா என்பதை நாம் கண்டறிய வேண்டும். இந்த உருமாறிய கொரோனா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. எனவே, மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.