என்னது ஜனநாயக நிறுவனங்களை பாஜக காப்பாற்றப் போகிறதா?
டெல்லி: ஜனநாயக நிறுவனங்களை காப்பாற்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்திருப்பது நகைப்புக்குரியது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே ஜனநாயக நிறுவனங்கள் படும்பாடு சொல்லி மாளாதவை. போலி என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவை விடுவிக்க மறுத்த நீதிபதி மர்ம மரணம் என்கிற புள்ளியில் இருந்து இப்பேரவலம் தொடங்குகிறது.
தேர்தல் ரிசல்ட் அறிவிக்க 5 மணி நேரம் லேட் ஆகும்.. ஆணையம் அறிவிப்பு
பயங்கரவாதி பிரக்யாசிங்
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்த இந்துத்துவா அமைப்பினர் வரிசையாக விடுதலை செய்யப்பட்டனர். இதில் உச்சமாக மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடைய சாத்வி பிரக்யாசிங், பாஜகவின் வேட்பாளராகவே போட்டியிட்டதுதான்!
உச்சநீதிமன்றத்தில் கலகக் குரல்
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியதும் இந்த பாஜக ஆட்சியில்தான். மத்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஜூனியர் நீதிபதிகளிடம் வழக்குகள் ஒப்படைக்கப்பட்ட 'வரலாறும்' இந்த ஆட்சிக் காலத்தில்தான்.
கூட்டணியில் தேர்தல் ஆணையம்
ஜனநாயகத்தின் அடிப்படையானது சுதந்திரமான தேர்தல். இதை நடத்தக் கூடிய தேர்தல் ஆணையத்தையே பாஜக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பதை இந்த தேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சியாகவே தேர்தல் ஆணையம் உருமாறிப் போன அவலத்தை சந்தி சந்தியாக அரசியல் கட்சிகள் பேசின.
ஜனநாயகம் படும்பாடு
ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிப்பதைப் போல இன்று 'வாக்கு எந்திரங்கள்' காணாமலேயே போன வீடியோக்களையும் குழந்தை தொழிலாளர்கள் கையில் வாக்கு எந்திரங்கள் வலம் வருவதையும் உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வருகிறது என்ற உடன், ஆனானப்பட்ட எதிரிகளின் மீதான வழக்குகளில் ஆதாரங்களே இல்லை என உச்சநீதிமன்றத்தில் சிபிஐயால் அந்தர் பல்டியும் அடிக்க முடிகிறது.
தமிழகம் ஒற்றை சாட்சி
பாஜகவின் கையில் 'ஜனநாயக நிறுவனங்கள்' பட்டபாடுகளுக்கு ஒற்றையான ஆகப் பெரும் சாட்சியாக நிற்பது தமிழகம்தான். கரூர் அன்புநான் தொடங்கி குட்கா விஜயபாஸ்கர் வரையில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டுகள், அமர்க்களங்கள் எத்தனை எத்தனை! எதில்தான் முடிவு வந்தது? ஒன்றிலும் கூட 'என்னதான்' நடந்தது என்கிற கேள்விக்கு பதிலே இல்லையே...இன்னும் ஒருபடிமேலேயே போய், ஒரு மாநில அரசாங்கத்தையே சோ கால்டு ஜனநாயக நிறுவனங்களையே காட்டி மிரட்டி பணியவைப்பது, தேர்தலில் கூட்டணி சேர நெருக்கடி கொடுப்பது என்பதை எல்லாம் அரங்கேற்றிக் காட்டியதும் பாஜக அரசுதானே. கற்றுக் கொண்ட வித்தையை மொத்தமாக களமிறக்கி ஜனநாயகத்தை கதறவிட்ட பாஜகதான் இன்று ஜனநாயக நிறுவனங்களின் பாதுகாப்புக்கு அறைகூவல் விடுக்கிறதாம்!
நடத்துங்கப்பு நாடகத்தை!