'1992ம் ஆண்டு வரலாற்று தவறு சரிசெய்யப்பட்டது'.. பாபர் மசூதி இடிப்பு குறித்து பிரகாஷ் ஜவடேகர்!
டெல்லி: பாபர் இந்தியாவிற்கு படை எடுத்து வந்த போது ராமர் கோயில் இடிப்பு ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு நாட்டின் ஆன்மா ராமர் கோயிலில் இருப்பது தெரியும். டிசம்பர் 6ம் தேதி, 1992ம் ஆண்டு வரலாற்று தவறு சரி செய்யப்பட்டது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி, இந்துத்துவா ஆதரவாளர்களால் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது, இதனால் நாடு முழுவதும் வெடித்த கலவரத்தில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் 2019ம் ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் இந்து அமைப்பினருக்கு சொந்தம் என்றும், அங்கு ராமர் கோயில் கட்டலாம் என்றும் உச்ச நீதிமன்றம தீர்ப்பில் குறிப்பிட்டது. அதேநேரம் பாபர் மசூதியை அயோத்தியிலேயே வேறு இடத்தில் கட்ட ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோயில் கட்டும் பணி
தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதனிடையே கார்ப்பரேட்டுகளின் நிதியிலோ அல்லது வெளிநாட்டு அமைப்புகளின் நிதியிலோ அல்லது எந்த ஒரு அரசாங்கத்தின் நிதியிலோ அயோத்தியில் கோயில் கட்டப்படாது என்றும் முற்றிலும் நம் நாட்டு மக்களின் நிதியில் மட்டுமே கட்டப்படும் என்று கோயில் கட்டும் குழு அறிவித்துள்ளது.
நன்றி நிகழ்ச்சி
ராமர் கோயில் கட்ட நன்கொடை திரட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு 1100 கோடியாகும் எனமதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடந்தது.
வரலாற்று தவறு
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், "பாபர் இந்தியாவிற்கு படை எடுத்து வந்த போது ராமர் கோயில் இடிப்பு ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு நாட்டின் ஆன்மா ராமர் கோயிலில் இருப்பது தெரியும். டிசம்பர் 6ம் தேதி, 1992ம் ஆண்டு வரலாற்று தவறு சரி செய்யப்பட்டது.
அயோத்தியில் நான்
கோயிலின் உருவம் சிதைக்கப்பட்டது. அது மசூதியே இல்லை. அங்கு வழிபாடு இல்லை. வழிபாடு இல்லாத இடம் தொழுவதற்கான இடம் அல்ல. நானே அதற்கு நேரடி சாட்சி. நான் யுவமோர்ச்சாவில் செயல்பட்டு வந்தேன். முதல் நாள் இரவு நான் அயோத்தியில் தூங்கி கொண்டிருந்தேன். 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் வரலாற்று தவறு சரிசெய்யப்பட்டது.
|
நாட்டிற்கு பெருமை
ராமர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் சொந்தமாக இல்லாமல் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமையாகிறார். பிற மதத்தினரும் ராமர் கோயில் கட்டுவதை ஆதரிக்கின்றன' இவ்வாறு கூறினார்.