அதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி!
Recommended Video
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வரும் போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் அருண் ஜேட்லி ஆவார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. அந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அருண் ஜேட்லி, காங்கிரஸ் கட்சியின் கேப்டன் அமரீந்தர் சிங்கிடம் தோல்வியுற்றார்.
இதையடுத்து இவர் குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மார்ச் 2018-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு மீண்டும் தேர்வானார். இதையடுத்து பிரதமர் மோடி அமைச்சரவையில் முக்கிய பதவியான நிதி அமைச்சர் பதவியை வகித்து வந்தார்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை
செல்லாது
இந்த நிலையில் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மோடி முன்னறிவிப்பு ஏதுமின்றி நேரலை ஒளிபரப்பு மூலம் நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது அவர் கருப்பு பணத்தை மீட்பதற்காகவும் ஊழலை ஒழிப்பதற்காகவும் ரூ, 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பதாக தெரிவித்தார்.
தபால் நிலையங்கள்
மேலும் தங்களிடம் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அதே ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளிலோ, தபால் நிலையங்களிலோ கொடுத்து தங்கள் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். இதனால் நவம்பர் 9-ஆம் தேதி முதல் வங்கிகள், தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் இருந்தது.
அடையாள அட்டை
மேலும் நவம்பர் 8-ஆம் தேதி முதல் அனைத்து ஏடிஎம் மையங்களும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய ரூ. 2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்கள் தங்கள் அவசரத் தேவைக்கு வங்கிகளில் ஒரு நபருக்கு ரூ. 4000 வரை புதிய ரூ. 2000 நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்றும் இதை பெற அடையாள அட்டை தேவை என்றும் அறிவிக்கப்பட்டது.
விதி தளர்த்தப்பட்டது
ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக பணம் பெறுதலுக்கு எவ்விதக் கட்டணத்தையும் தனது வாடிக்கையாளரிடம் 30 டிசம்பர் 2016 வரை வங்கிகள் வசூலிக்காது என அறிவிக்கப்பட்டது. 18 நவம்பர் 2016 வரை ஒரு நாளைக்கு 2000 ரூபாய் மட்டுமே ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக பெற இயலும். 19 நவம்பர் 2016 முதல், ஒரு நாளைக்கு 4000 ரூபாய் என விதிமுறை தளர்த்தப்பட்டது.
சிரமம்
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். மேலும் வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் நின்று பணத்தை பெற நின்றவர்களில் சிலர் மரணமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. தங்களிடம் உள்ள கணக்கில் வராத பணத்தை குஜராத் மாநிலத்தில் உள்ள சிலர் தங்கமாக மாற்ற முயற்சித்த போது தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து சாதாரண மக்களை சிரமத்துக்குள்ளாகியது.
நிதி அமைச்சர்
கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என மத்திய அரசு கூறிய போதிலும் வங்கி வாசல்களிலும் ஏடிஎம் மையங்களிலும் கால்கடுக்க நின்றிருந்தவர்கள் சாதாரண மக்களே தவிர கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள் அல்ல என மக்கள் விமர்சனம் செய்தனர். இந்த காலகட்டத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் அருண்ஜேட்லியாவார்.