நிதீஸ்குமாரின் கட்சிக்கு அடித்தது ஜாக்பாட்! துணை சபாநாயகர் பதவியை தூக்கி தர முன்வந்த பாஜக
டெல்லி: அமைச்சரவையில் பெரிய அளவில் இடம் கொடுக்காததால் விரகத்தில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக தயராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், துணை சபாநாயகர் பதவியை தனது கூட்டணி கட்சியான ஜக்கிய ஜனதா தளத்துக்கு கொடுக்க பாஜக முன்வந்துள்ளது.
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 350க்கும மேற்பட்ட இடங்களில் வென்றன. பாஜக மட்டுமே 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பெரும்பாலான கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்ட நிலையில், பீகாரில் பாஜகவின் கூட்டாளியான ஜக்கிய ஜனதா தளம் இடம்பெறவில்லை. அமைச்சரவையில் ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் தலைவரும் பீகாரும் முதல்வருமான நிதீஷ்குமார் தங்கள் கட்சி மோடியின் அமைச்சரவையில் இடம் பெறாது என அறிவித்தார்.
இந்நிலையில 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த 3 நாட்களாக எம்பிக்கள் பதவியேற்வு வைபவம் நடந்தது. மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மக்களவை துணை சபாநாயகர் பதவியை தனது கூட்டணி கட்சியான ஜக்கிய ஜனதா தளத்துக்கு கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் தமிழக கட்சியான அதிமுக சார்பில் கட்சியின் எம்பி தம்பிதுரை துணை சபாநாயகராக இருந்தார். இந்த முறை பீகாருக்கு துணை சபாநாயகர் பதவி செல்லப்போகிறது. மாநிலங்களவையில் கூடுதலான ஆதரவு திரட்டும் முயற்சியில் இருக்கும் பாஜகவுக்கு நிதீஷ்குமாரின் ஜக்கிய ஜனதா தளம் பக்க பலமாக இருக்கும் என்பதால் இந்த ஆபரை வழங்க பாஜக முன்வந்துள்ளதாம்.
இதே ஆபரை முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக அளித்தது. ஆனால் ஆந்திர முதல்வர் ஜெகன் அதனை ஏற்கவில்லை. இதனால் ஜக்கிய ஜனதா தளத்துக்கே துணை சபாநாயகர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.