ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு துணை சபாநாயகர் பதவி?... பாஜக புதிய திட்டம்
Recommended Video
டெல்லி: மக்களவை துணை சபாநாயகர் பதவி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. 52 இடங்களை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியாமல் போனது.
நரேந்திர மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்றுள்ளார். பிரதமரைத் தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்தநிலையில், 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 17-ந் தேதி தொடங்க உள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல்
முதல் 2 நாளில் புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். அடுத்த மாதம், 26 ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ள இந்த தொடரில், ஜூலை 5ல், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
ஜெகன்மோகனுடன் சந்திப்பு
20-ந் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூன் 19-ம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரதிநிதியாக பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகனை வி்ஜயவாடாவில் நேற்று சந்தித்தார்.
துணை சபாநாயகர் பதவி
அப்போது துணை சபாநாயகர் பதவி வழங்குவது குறித்து அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு எவ்வித பதிலும் கூறாத ஜெகன்மோகன் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாக கூறியதாக தெரிகிறது.
சிறப்பு அந்தஸ்து
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பதால், பாஜகவுடன் இணக்கம் காட்டி வரும் ஜெகன்மோகன் ரெட்டி, சிறுபான்மை மக்களின் நம்பிக்கைகாக துணை சபாநாயகர் பதவியை ஏற்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுக்கு எதிரான அரசியல் நகர்வாக ஜெகன்மோகன் ரெட்டியை வளைத்து போட பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த முறை துணை சபாநாயகராக தமிழகத்தை சேர்ந்த தம்பிதுரை இருந்தார். இந்த முறை, காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு பாஜக வலைவிரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.