பேச்சு, பேச்சு மட்டும்தான்.. புல்வாமாவுக்கு பிறகும் மோடி அரசு பாடம் கற்கவில்லை.. காங். கடும் கோபம்
டெல்லி: வெறும் பேச்சு மட்டும்தானே, மோடி அரசில் செயல்பாடுகள் எதுவும் கிடையாது என்பதற்கு, புல்வாமாவை தொடர்ந்து, இப்போது, கட்சிரோலி ஒரு உதாரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி பகுதியில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு, தாக்குதலில், 15 பாதுகாப்பு படையினர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுபற்றி, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், இன்று கூறுகையில், நமது பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்கதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உயிர் தியாகம் செய்தவர்கள் குடும்பத்திற்கு பின்னால் மொத்த இந்தியாவுமே உறுதுணையாக இருக்கும்.
16 பேரை பலிவாங்கிய கட்சிரோலி குண்டுவெடிப்பு.. நக்சல் நடத்திய கொடூர தாக்குதல்.. திக் வீடியோ!
மீண்டும் ஒருமுறை நமது ராணுவ வீரர்களின் கான்வாய் வாகனங்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அரசு வெறுமனே பேச்சு, பேச்சென்றுதான் உள்ளதே தவிர, எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் தவறுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை சம்பவம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். கடந்த 5 வருடங்களில், நக்சலைட் தாக்குதல்களில் 390 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுதான், மோடி அரசு இந்தியாவை பாதுகாக்கும் லட்சணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.