வர போகிறதா முழு லாக்டவுன்...சூசகமாக சொன்னாரா பிரதமர் மோடி
டெல்லி : நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாக தீவிரமடைந்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் தினசரி அதிகம் பாதிக்கப்படுவோரை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் 2000 ஐ தாண்டி உள்ளது.
2-வது டோஸ் தடுப்பூசி போட்டுகொண்ட ஸ்டாலின்.. 'நம்மையும், மக்களையும் பாதுகாப்போம்'.. சூப்பர் ட்வீட்
வேகமெடுத்து வரும் கொரோனாவால் டெல்லி, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பகுதி நேர ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் விதித்துள்ள ஊடரங்கானது ஏப்ரல் 30 அல்லது மே மாத முதல் வாரம் வரை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. ஜனவரி மாதம் துவங்கிய தடுப்பூசி போடும் பணிகளில் முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது மே 1 ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
லாக்டவுன் பற்றி பேசாத பிரதமர்
அதிகரித்து வரும் கொரோனாவால் எப்போது வேண்டுமானாலும் முழு லாக்டவுன் போடப்படலாம் என்ற எண்ணம் மக்களிடம் பரவ துவங்கி உள்ளது. இதற்கிடையே 2 நாட்களுக்கு முன் இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்டதால் முக்கிய அறிவிப்பு ஏதாவது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தடுப்பூசிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை என பரவிய தகவல்கள் குறித்து விளக்கமும், கொரோனாவில் இருந்து மீண்டு வர மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே பிரதமர் முன்வைத்தார்.
சூசகமாக சொன்ன பிரதமர்
அதேசமயம் தனது உரையின்போது, கொரோனாவிற்கு எதிரான போரில் முழு லாக்டவுன் என்பது கடைசிகட்ட ஆயதம் மட்டுமே என்ற விஷயத்தையும் பிரதமர் தெரிவித்திருந்தார். இதனால் முழு லாக்டவுன் விரைவில் கொண்டு வரப்படும் என்பதை தான் பிரதமர் இவ்வாறு சூசமாக கூறினாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதே சமயம் கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், இது வரை மத்திய அரசு முழு லாக்டவுன் அல்லது மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காதது ஏன் என்ற கேள்வியும் நிலவுகிறது.
500 க்கே முழு லாக்டவுன்
கடந்த ஆண்டு முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 என்ற அளவிலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலுமே இருந்தது. அந்த சமயத்தில் மார்ச் 23 ம் தேதி மாலை டிவி.,யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், நள்ளிரவு முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். பிறகு லாக்டவுன் படிப்படியாக நீட்டிக்கப்பட்டது, பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தினமும் 3 லட்சம் பாதிக்கப்படும் போது லாக்டவுன் பற்றி எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
தமிழிசை சொன்ன விளக்கம்
சமீபத்தில் பேட்டி அளித்த புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த ஆண்டு கொரோனா பற்றி, அது பரவும் முறை பற்றி தெளிவாக எதுவும் தெரியாமல் இருந்தது. அதனால் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. தற்போது முகக்கவசம் அணிந்து, சானிடைசர் பயன்படுத்தினால், சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனா பரவலை தடுக்க முடியும் என தெரியும். அதனால் லாக்டவுன் அமல்படுத்தப்படவில்லை. ஆனால் இதே நிலை தொடர்ந்தால் முழு லாக்டவுன் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை என்றார். தமிழிசை மட்டுமல்ல பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கடைசியாக அடிகோடிட்டு காட்டிய ஒரே விஷயம் இதே நிலை தொடர்ந்தால் முழு லாக்டவுன் அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்பது தான்.
தடுப்பூசி மீது நம்பிக்கையா
தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாலும், பல புதிய மருந்துகளுக்கு அனுமதி கொடுத்து வருகிறது மத்திய அரசு. தடுப்பு மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தடுப்பு மருந்துகளை தயாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி மூலம் கொரோனாவை தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் மத்திய அரசு, லாக்டவுன் ஆயுதத்தை கையில் எடுக்காமல் உள்ளதா என்ற எண்ணம் தோன்றுகிறது.
அரசியல் காரணம் ஏதும் உண்டா
அரசியல் ரீதியாக பாஜக.,வை பொறுத்த வரை மேற்குவங்க சட்டசபை தேர்தல் மிக முக்கியமானது. 8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வரும் மேற்குவங்கத்தில் ஏப்ரல் 29 வரை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நடக்கும் சமயத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் அது ஒட்டுப்பதிவு சதவீதத்தை பாதிக்கும். இது பாஜக.,விற்கு பின்னடைவாக அமையலாம் என்ற நிலை உள்ளது. இதை மனதில் வைத்துக் கூட மத்திய அரசு முழு லாக்டவுனை அமல்படுத்தாமல் உள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேற்கு வங்க தேர்தல் முடிவதற்காக தான் மத்திய அரசு காத்திருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
சந்தேகத்தை உறுதிப்படுத்தும் மாநிலங்கள்
மாநில அரசுகளும் பகுதி நேர ஊரடங்கை ஏப்ரல் 30 வரை மட்டுமே அறிவித்துள்ளன. இதனால் மே முதல் தேதியிலிருந்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள், புதிய அறிவிப்புக்களை வெளியிடலாம் அல்லது மத்திய அரசின் முடிவை பொறுத்து மாநில அரசுகள் உத்தரவை நீட்டிக்கலாம் என கூறப்படுகிறது.