வழியனுப்ப கூட வராத பிடன்.. முன்னுரிமை கொடுக்காத அமெரிக்க ஊடகங்கள்?.. மோடி பயணத்தில் என்ன நடந்தது?
டெல்லி: இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு இன்று இந்தியா திரும்பினார். 5 நாட்கள் அமெரிக்க பயணத்தில் குவாட் மீட்டிங் தொடங்கி ஐநா பேச்சு வரை பல்வேறு முக்கியமான கூட்டங்களில் கலந்து கொண்டு இன்று பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்.
பிரதமர் மோடி இந்த அமெரிக்க பயணத்தில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்தார். இரண்டு நாட்டு உறவு குறித்தும் ஆசிய பிரச்சனைகள் குறித்தும் இருவரும் உரையாடினார்கள். பின்னர் குவாட் எனப்படும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வங்கக் கடலில் உருவானது குலாப் புயல்- இன்று மாலை கரையை கடக்கிறது- ஆந்திரா, ஒடிஷாவுக்கு ஆரஞ்சு அலர்ட்
அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களான குவால்காம், அடோப், பர்ஸ்ட் சோலார், ஜெனரல் அட்டாமிக்ஸ், பிளாக் ஸ்டோன் போன்ற நிறுவனங்களின் சிஇஓக்களை நேரில் சந்தித்து உரையாடினார். அதன்பின் அதிபர் பிடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். பின்னர் இறுதியாக நியூயார்க்கில் ஐநா பொதுக்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
குற்றச்சாட்டு
பிரதமர் மோடியின் இந்த அமெரிக்க பயணம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. முக்கியமாக அவரின் ஐநா உரை பெரிய அளவில் கவனம் பெற்றது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெற்றி, ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம், பாகிஸ்தானுக்கு சீனா ரஷ்யா வழங்கும் ஆதரவிற்கு இடையில் இந்திய பிரதமர் மோடியின் இந்த பயணம் அதிக கவனம் பெற்றது. அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் தேசிய அளவில் கவனம் பெற்றது. ஆனால் அமெரிக்காவில் இவரின் பயணம் அதிகம் கவனிக்கப்படவில்லை என்று சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கவனிக்கப்படவில்லை
அதாவது பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் அமெரிக்காவில் வரவேற்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது மோடி அமெரிக்காவில் ஹீரோ போல வரவேற்கப்பட்டார். ஹவுஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சி தொடங்கி மோடியின் ஒவ்வொரு அமெரிக்க பயணமும் டிரம்ப் காலத்தில் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ஆனால் அதிபர் பிடனுக்கு கீழ் அப்படி நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊடகங்கள்
அமெரிக்க ஊடகங்களும் மோடியின் பயணம் பற்றி பெரிதாக செய்திகளை எழுதவில்லை. மோடி - பிடன் சந்திப்பு குறித்து சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் மற்றபடி ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மோடிக்கு கொடுக்கப்படவில்லை. அமெரிக்கா ஊடகங்கள் மோடியின் பயண திட்டங்கள், ஐநா உரை குறித்து பெரிதாக எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
வரவில்லை
ஏன் பிரதமர் மோடி வாஷிங்க்டன் வந்த போது அவரை வரவேற்க அதிபர் பிடன் வரவில்லை. துணை அதிபர் கமலா ஹாரிஸும் வரவில்லை. விமான நிலையத்தில் மோடிக்கு பெரிதாக வரவேற்பு கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. இதெல்லாம் போக துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜாம்பியா அதிபருடன் நடந்த சந்திப்பு குறித்தெல்லாம் ட்வீட் செய்தார். ஆனால் மோடியுடன் நடந்த சந்திப்பு குறித்து மறுநாள்தான் தாமதமாக, பலர் கோரிக்கை வைத்த பின் ட்வீட் செய்தார்.
கமலா ஹாரிஸ்
அதோடு இந்தியாவில் ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் கமலா ஹாரிஸ் தனது உரையில் பேசினார். இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக கமலா ஹாரிஸ் மோடிக்கு லேசாக அழுத்தம் கொடுத்ததாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஜனநாயகத்தை காக்க வேண்டியது நமது கடமை, ஜனநாயக மதிப்புகள் மற்றும் அதன் அமைப்புகளைப் பாதுகாப்பது முக்கியம் என்று பிரதமர் மோடியிடம் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டதாக தெரிகிறது.
பிடன் என்ன பேசினார்
அதேபோல் அதிபர் பிடனும் ஜனநாயகம் குறித்தும், காந்தியடிகளின் கருத்துக்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. பிரதமர் மோடிக்கு ஒரு பக்கம் அமெரிக்காவை சேர்ந்த இந்தியர்கள் வரவேற்பு கொடுத்து இருந்தாலும், இன்னொரு பக்கம் சிலர் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் செல்லும் பாதையில் பதாகைகள் ஏந்தி நின்றது குறிப்பிடத்தக்கது. கடைசியில் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய போது அவரை வழியனுப்ப கூட அதிபர் பிடன் வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் எப்படி?
இதற்கு முன் புஷ் காலத்தில் மன்மோகன் சிங் பிரதமராக சென்ற போது மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஒபாமா காலத்திலும் இதேபோல் வரவேற்பு மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டது. ஒரு காலத்தில் ரொனால்ட் ரீகன் ராஜிவ் காந்தியை வெள்ளை மாளிகை வாசலில் நின்று வரவேற்றதும், அவருக்கு ரீகன் குடையை சுமந்து சென்றதும் வரலாறு. ஆனால் அமெரிக்கா இந்தியா உறவு இப்போது அவ்வளவு நெருக்கம் இன்றி இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஆக்கஸ்
அதிபர் பிடனின் இந்த நடவடிக்கைகள் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த பயணத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு குவாட் கூட்டம் மட்டும் அதிக கவனம் பெற்றது. ஆனால் இனி குவாட் இதே பலத்தோடு இயங்குமா என்பது சந்தேகம் ஆகியுள்ளது. 'ஆக்கஸ்' (ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா) அமைப்பு உருவான பிறகு, குவாட் அமைப்பு மீதான எதிர்பார்ப்பு குறையும் என்று கூறப்படுகிறது. இந்த ஆக்கஸ் அமைப்பில் இந்தியா, ஜப்பானை சேர்க்க அமெரிக்கா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.