1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்!
டெல்லி; இந்திரா காந்தியின் அவசரநிலை பிரகடனத்தை அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆதரித்ததா? என்கிற சர்ச்சை இன்னமும் தொடருகிறது. இதற்கான விடையும் இன்னமும் கிடைக்கத்தான் இல்லை.
1975-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்திரா காந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தார். அன்றைய அவசரநிலை பிரகடனத்தால் துயரை அனுபவித்தவர்களை இன்றைய பிரதமர் மோடி உள்ளிட்டோர் நினைவுகூறுகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியோ, தற்போதைய தேசம் சூப்பர் எமர்ஜென்சி நோக்கி போகிறது என மோடியை சாடியுள்ளார். அன்றைய அவசரநிலை பிரகடன காலத்தில் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட வலதுசாரி தலைவர்களும் சிறைவாசம் அனுபவித்தனர்.
44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி!
ஆதரித்ததா ஆர்.எஸ்.எஸ்.?
ஆனால் வலதுசாரிகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம், இந்திரா காந்தியின் அவசரகாலத்தை ஆதரித்தது என்பது தொடர்பான சர்ச்சை இன்று வரை நீடிக்கிறது. 2000-ம் ஆண்டு பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த போது இப்போது பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி ஆங்கில நாளேடு ஒன்றில் இப்படித்தான் எழுதினார்.
துரோகிகளாக ஆர்.எஸ்.எஸ்.
அதாவது, 1975-77 ஆம் ஆண்டு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிரான போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளாகத்தான் இருந்தார்கள் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் வாக்கியம். அப்போது சுப்பிரமணியன் சுவாமி மாறுவேடத்தில் தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
தியோரஸ் மன்னிப்பு கடிதம்
மேலும், மகாராஷ்டிராவின் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைவர் பாலாசாகேப் தியோரஸ், இந்திரா காந்திக்கு எண்ணற்ற மன்னிப்பு கடிதங்களை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் ஜெய்பிரகாஷ் நாராயணுடன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் இணைந்து செயல்படாது; இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டத்தை ஆதரிக்கிறோம் எனவும் தியோரஸ் குறிப்பிட்டதாக சுப்பிரமணியன் சுவாமி பதிவு செய்திருக்கிறார்.
வாஜ்பாயின் மன்னிப்பு கடிதம்
அதேபோல் வாஜ்பாய்கூட இந்திரா காந்திக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியவர்தான். அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்த 20 மாதங்களில் வாஜ்பாய் பெரும்பாலான காலம் பரோலில்தான் இருந்தார். இந்திரா அரசுக்கு எதிரான எந்த ஒரு போராட்டத்திலும் வாஜ்பாய் பங்கேற்கவில்லை எனவும் சுப்பிரமணியன் சுவாமி பதிவு செய்திருக்கிறார்.
சர்ச்சைக்குரிய பேட்டி
முன்னாள் உளவுத்துறை தலைவர் டிவி ராஜேஸ்வர் ராவும் இதே கருத்தை பதிவு செய்திருந்தார். 1975-ம் ஆண்டு இந்திய உளவுத்துறையில் துணைத் தலைவரா இருந்தவர்தான் இந்த ராஜேஷ்வர். 2015-ம் ஆண்டு ஒரு பேட்டியில், இந்திராவின் அவசரகாலத்தை மட்டும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆதரிக்கவில்லை; அதற்கு அப்பால் இந்திராவின் மகன் சஞ்சய் காந்தியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி 20 அம்ச திட்டத்தை செயல்படுத்த தயாராகவும் இருந்தது என்றார்.
ஆர்.எஸ்.எஸ். பதில்
சுப்பிரமணியன் சுவாமி, ராஜேஷ்வர் தெரிவித்திருக்கும் இக்கருத்துகளுக்கு வலிமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எமர்ஜென்சி காலத்து செய்தியாளர் கூமி கபூர் எழுதிய புத்தகத்தில் உடல்நலக் குறைவால்தான் வாஜ்பாய் பரோலில் வெளிவந்தார் என பதிவு செய்திருக்கிறார். மேலும் 2015-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தமது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில் ஒரு விளக்கம் தந்தது. அதில், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது தொடர்ச்சியாக கூறப்படும் பொய்யான அவதூறுகளில் இதுவும் ஒன்று என பதிவு செய்தது.
44 ஆண்டுகளாகியும் இன்னமும் தொடருகிறது சர்ச்சை!