டிரம்ப் பேட்டியை நேற்று கவனிச்சீங்களா.. எவ்வளவு சாமர்த்தியமான பதில் அது.. காரணமும் சொன்னாரு!
டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது மிக சாமர்த்தியமாக டெல்லி வன்முறை தொடர்பான விஷயங்களை தவிர்த்தார். அதற்கு அவர் கூறிய காரணமும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்,
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த பிப்ரவரி 24 ம் தேதி இந்தியா வந்தார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் இருந்து நேரடியாக இந்தியாவின் அஹமதாபாத்திற்கு டிரம்ப் வருகை தந்தார். வந்தவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். 24ம் தேதி அஹமதாபாத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்தவர், நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அத்துடன் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றி பார்த்தார்.
ஏட்டு கொலை
ஒரு பக்கம் டிரம்ப் வந்து இறங்கிய அன்று தான் டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் டெல்லியில் மோதல் வெடித்தது. அன்று நடந்த கலவரத்தில் தலைமைக்காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். டெல்லி போலீஸ் துணை கமிஷ்னர் உள்பட உயர்அதிகாரிகள் சிலர் காயம் அடைந்தனர். அதன் பிறகு வன்முறை தீவிரம் அடைய ஆரம்பித்தது.
நாசுக்காக பதில்
ஒருபக்கம் வன்முறை டெல்லியில் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில் ஆக்ராவில் இருந்து டெல்லி சென்ற டிரம்ப் அன்று இரவு ஐடிசி நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அடுத்த நாள் காலையில் நிச்சயம் டெல்லியில் நிலைமை மோசமாக இருக்கிறது என்பதை நிச்சயம் அறிந்திருப்பார் டிரம்ப். அதனால் தான் என்னவோ செய்தியாளர்களை சந்திக்கும் போது மிக நாசுக்காக தனது பதில்களை அளித்தார்.
போக விரும்பவில்லை
செய்தியாளர்களின் சரமாரியான கேள்விகளை எதிர்கொண்ட அதிபர் டிரம்ப், அளித்த பேட்டியில் கவனிக்க வேண்டிய வரிகள் இவை தான், " இந்தியாவில் இருந்த இரண்டு நாட்களும் சிறப்பான நாட்கள். நான் சர்ச்சைக்குரிய விஷயங்களுக்குள் போக விரும்பவில்லை. அத்தகைய கேள்விகளுக்கு பதில் அளித்து, 2 நாட்கள் பயணித்தில ஒரு அடி விழ விரும்பவில்லை.
பதில் வந்துவிடும்
ஒரே ஒரு எளிய கேள்வியை கேட்பீர்கள். பதிலை வெளியே கொண்டுவந்துவிடுவீர்கள். அது பயணத்தையே முடித்துவிடும். அப்புறம் நீங்கள் என் பயணத்தை பற்றி பேசமாட்டீர்கள். எனவே நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால் சொல்கிறேன், நான் என் பதில்களில் மிகவும் கவனமாக இருப்பேன்" இவ்வாறு அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு தனது பயணம் குறித்து பேசும் முன் வெளிப்படுத்திய கருத்து ஆகும்.
சர்வதேச விளைவுகள்
இதன் மூலம் டிரம்ப் எவ்வளவு லாவகமாக தன்னை நோக்கி வந்த டெல்லி வன்முறை குறித்த கேள்விகளை கையாண்டுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. டிரம்ப் தனது பேட்டியில் சொன்னது போல் சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு அவர் வாய் திறந்து பதில் அளித்தால் , சர்வதேச அளவில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்து தான் டிரம்ப் அப்படி பதில் சொல்லியிருக்கிறார்.
விவாதப்பொருளாகியிருக்கும்
குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்பதை செய்தியாளர்களிடம் நேற்று சொன்ன டிரம்ப், அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார். அதேபோல் டெல்லியில் நடந்த வன்முறையை பற்றி விவாதிக்க விரும்பவில்லை இது உள்நாட்டு விவகாரம் என்று சொல்லிவிட்டு சர்ச்சைக்களை தவிர்த்தார். டிரம்ப் ஒருவேளை வழக்கமான பாணியில் பதில்அளித்திருந்தால் இந்நேரம் அவரது சுற்றுப்பயணத்தை விட அவரது பேச்சுதான் மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கும். ஆனால் அப்படி செய்யவில்லை. வந்த இடத்தில் வந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு கிளம்ப வேண்டும் என்பார்களே அப்படிப்பட்ட மனநிலையில் டிரம்ப் இந்தியாவை விட்டு புறப்பட்டு சென்றார்.