எல்லாத்தையும் இப்படித்தான் கொண்டாடுவதா? சமூகவிலகல் குறித்த புரிதலே இல்லையே! மோடி இப்படியா சொன்னார்?
டெல்லி: சமூக விலகல் குறித்தே புரிதல் இல்லாமல் இப்படியா கூட்டம் கூடி கொண்டாடுவது?
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மத்திய - மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் 3-ஆவது நிலையை அடையக் கூடாது என்பதற்காக இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க மார்ச் 22ஆம் தேதி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
இரவு பகல்
இதையடுத்து நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் வெளியே வரவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் இந்த ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இதையடுத்து கொரோனாவை ஒழிக்க சுகாதாரத் துறை, வருவாய் துறை, நகர நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், விமான நிலைய அதிகாரிகள், ரயில்வே துறையினர், போலீஸார் என ஏராளமானோர் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார்கள்.
ஓசை எழுப்புவது
அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் நேற்று மாலை 5 மணிக்கு அவரவர் வீட்டு ஜன்னல்கள், பால்கனிகள், வீட்டு கதவு ஆகியவற்றில் நின்று கொண்டு கரவொலி எழுப்புமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். இதன்படி நேற்று மாலை 5 மணிக்கு அவரவர் வீடுகளில் இருந்து மக்கள் கைதட்டுதல், மணியோசை எழுப்புதல், தட்டுகளில் ஓசை எழுப்புவது உள்ளிட்டவற்றை செய்து உற்சாகப்படுத்தினர்.
|
கூட்டத்தில்
ஆனால் ஒரு சில இடங்களில் இதை விழா போல் கொண்டாடிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆம், கூட்டம் கூட்டமாக தாரை தப்பட்டம், ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக சென்று மேற்கண்ட துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். அந்த கூட்டத்தில் கிட்டதட்ட 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இது போல் இரு வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அதாவது அரசு சொல்லும் சமூக விலகல் குறித்த புரிதலே இல்லாமல் இப்படி எல்லாவற்றையும் கொண்டாடுவதா?
|
பரவுதல்
கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வந்து 4 அல்லது 5 ஆவது வாரங்களில் ஒட்டுமொத்தமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது சமூக பரவலை தடுக்கவே நேற்று ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் இப்படி ஒன்று கூடியுள்ளனர். இதிலிருந்து யாருக்கேனும் பரவியிருந்தால் என்னவாவது?
நடவடிக்கை
கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு அறிகுறி ஏதும் தெரியாமல் இருந்தாலும் பரவு நிலை உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சமூக விலகலுக்காக மத்திய மாநில அரசுகள் பாடுபட்டு வருகின்றன. அவற்றை ஒரே நாளில் இவர்கள் காலி செய்துள்ளனர். எதற்கெடுத்தாலும் கூட்டம் கூட்டமாக கொண்டாடுவதா? இது கடும் விதிமீறலாகவே கருதப்படுகிறது. இவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை.