இதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்
டெல்லி: இதுதான், சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம்.. என்று வியந்து பார்க்கிறது அரசியல் உலகம். சோனியாகாந்தி ஒரு சொல் சொன்னால், ஆனானப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியே, வேறுவழியின்றி அதைச் செய்கிறார்.
ஆனால், ராகுல் காந்தி என தான் திரும்பத் திரும்ப சொன்னாலும் கூட, காங்கிரஸ் கட்சிக்குள் கூட, சில தலைவர்கள் அதை கேட்பது கிடையாது. ஆளும் கட்சியை பற்றி சொல்லவே வேண்டாம். ராகுல் காந்தி, கருத்துக்கு எப்போதும் எகத்தாளமான பதில்தான் பரிசாக கிடைக்கும்.
டெல்லி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. ஆனால், பிரதான எதிர்க் கட்சியான காங்கிரசின் இளவரசர் ராகுல் காந்தி வழக்கம்போல வெளிநாட்டு பயணத்தில் இருக்கிறார்.
அடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்?
களமிறங்கிய சோனியா காந்தி
வயது முதிர்வையும், நோய்களையும் பொருட்படுத்தாமல் சோனியாகாந்தி நடு வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், இளைஞரான ராகுல்காந்தியின், சொல் பேச்சை கண்டுகொள்ளாத, பாஜகவும் அதன் தலைவர்களும் சோனியா காந்தி சொன்னால் அதற்கு உரிய முக்கியத்துவம் தருகிறார்கள். இதற்கு, கடந்த இரு தினங்களில் சில முக்கிய உதாரணங்கள் நடந்துள்ளன. அதுதான் சோனியா காந்தியின் கெத்து என்று புளகாங்கிதம் தெரிவிக்கிறார்கள் காங்கிரஸ் சீனியர்கள்.
மோடி ட்வீட்
டெல்லியில் நடைபெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்டி குடியரசுத் தலைவரிடம் பேரணியாகச் சென்று புகார் அளித்தது காங்கிரஸ். தலைமை தாங்கினார் சோனியாகாந்தி. அவர், தனது பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடியை விளாசித் தள்ளினார். இவ்வளவு பெரிய விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால், பிரதமர் வாயைத் திறக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். ஆச்சரியம் தெரியுமா? அசையாத இரும்பு மனிதர் என்று அழைக்கப்படக்கூடிய மோடி, அடுத்த சில மணி நேரங்களில் தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக அடுத்தடுத்து இரண்டு ட்வீட்டுகளை வெளியிட்டார். அதில், டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும், சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதுதான் சோனியாவின் வெற்றி. அவர் கருத்து மக்கள் மத்தியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மோடி உணர்ந்து இருக்கிறார் என்பதற்கு இது சான்று.
கெஜ்ரிவால்
அதே பிரஸ்மீட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் விட்டு வைக்கவில்லை சோனியா. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று முதல்வர் இதுவரை பார்க்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார் சோனியா காந்தி. மாலையிலேயே, அடித்துபிடித்து ஓடினார் அரவிந்த் கெஜ்ரிவால். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று நலம் விசாரித்தார். பிரதமரே, சோனியாவின் பேச்சுக்கு மரியாதை கொடுக்கும்போது, முதல்வர் கெஜ்ரிவால் மட்டும் விதிவிலக்கா என்ன?
கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது
அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை மத்திய அரசு. மாலையிலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை, சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்து இஸ்லாமிய மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த கூடிய முயற்சியில் ஈடுபட்டது. இதன் பலனாக டெல்லியில் இன்று ஓரளவுக்கு அமைதி திரும்பியுள்ளது.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி வலிமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்த கூடிய ஒரு சம்பவம்தான் இது. எதிர்க் கட்சியும் அதன் தலைவரும் உறுதியானவராக இருந்தால், ஆளும் கட்சியால் அவர்கள் சொல்லை தட்டி நடக்க முடியாது. இறுதியில் அது மக்களுக்குத்தான் நன்மை.
ராகுல் காந்தி கருத்துக்கு கேலி
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்" என்று வள்ளுவரே கூறியுள்ளது இதனால்தான். இடிக்க ஆள் இருந்தால்தான், மன்னன் சிறப்பாக ஆட்சி நடத்த முடியும். சோனியா காந்தி இத்தனை குற்றச்சாட்டுகளை வீசினாலும், அவருக்கு எதிராக வலுவான எந்த ஒரு விமர்சனத்தையும் ஆளும்கட்சி வைக்கவில்லை. அதேநேரம் ராகுல்காந்தி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு, கிண்டலும் கேலியும் தான் பதிலாக வந்தது.
சோனியா ஆளுமை
சோனியா காந்தி, விழுந்து கிடந்த காங்கிரசை தனது தோள் மீது தூக்கி வைத்து, அடுத்தடுத்து தொடர்ந்து 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நடத்துவதற்கு முதுகெலும்பாக இருந்தவர். அவரது ஆளுமை திறன் அளப்பரியது. நிரூபிக்கப்பட்டது. அவரது உழைப்பும் மிக அதிகம். ஆனால், ராகுல் காந்தி அப்படி கிடையாது. முக்கியமான நேரங்களில் கூட அவர் இந்தியாவில் இருக்காமல் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
கற்க வேண்டும்
காங்கிரஸ் கட்சி ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. தனது தாய் வயோதிகம் மற்றும் நோய்வாய்ப்பட்டு முழு வீச்சில் அரசியலில் ஈடுபட முடியாமல் இருக்கிறார். இந்த நிலைமையில் சுமையை தன் தோள்மீது தூக்குவோம் என்ற முனைப்பு ராகுல் காந்தியிடம் இல்லை. இவை கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிராக பல தலைவர்களை முனுமுனுக்க வைத்துள்ளது. சசிதரூர், சல்மான் குர்ஷித் போன்ற மூத்த தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் இதை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். கட்சிக்குள்ளேயே விமர்சிக்கப்படும் ஒருவர் எப்படி ஆளுங்கட்சியின் நன்மதிப்பை பெற முடியும்? இங்குதான் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பாடம் கற்றுக் கொள்ள நிறைய தேவை இருக்கிறது.