விலை வேறுபாடு சரிதான்.. கொரோனா வேக்சின் கொள்கையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்- மத்திய அரசு வாதம்
டெல்லி: மத்திய, மாநில அரசுகளுக்கு தனியார் தடுப்பூசி நிறுவனங்கள் வெவ்வேறு விலைகளில் தடுப்பூசி விற்பனை செய்வதற்கு அனுமதித்துள்ளதற்கு காரணம், அதிகப்படியான தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம்தான் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு குறைவான விலையில் தடுப்பூசிகளை வழங்கக் கூடிய மருந்து நிறுவனங்கள், மாநில அரசுகளுக்கு அதிக விலையில் விற்பனை செய்கின்றன.
இந்த நிலையில்தான் கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தடுப்பூசிகளின் விலைகளில் இவ்வாறு வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர் இதை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு கூறுகையில், விலை வேறுபாடு என்பது தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கம் தரும் நடவடிக்கை ஆகும். போட்டி சந்தை இதன் மூலம் உருவாகும். எனவே பல்வேறு தனியார் தடுப்பூசி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்திய சந்தைக்குள் வருவார்கள். ஒருவருக்கு ஒருவர் விலையை அவர்களாகவே குறைத்துக் கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டி சந்தை காரணமாக அதிக விற்பனையாளர்கள் சந்தைக்கு வருவதால் அதிகப்படியான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும். தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாது.
தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனைகளை மத்திய அரசு நடத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேமாதிரியாக விலையை நிர்ணயிக்க வேண்டும், ஒரு மாநிலத்தில் அதிக விலையும் இன்னொரு மாநிலத்தில் குறைந்த விலையும் நிர்ணயம் செய்வது சரியானதாக இருக்காது என்றும் வலியுறுத்தியுள்ளோம். 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு அனைத்து மாநிலங்களும் முன்வந்துள்ளன. எனவே பொதுமக்களுக்கு இந்த செலவு சென்று சேராது.
தடுப்பூசியின் மூலப்பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தற்போது சில பிரச்சினைகள் இருப்பதை கருத்தில் கொண்டு, பிற வழிகள் மூலமாக அதிகப்படியான தடுப்பூசி புழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. தொற்று நோய் போக்கை கணிப்பது கடினம் என்பதால் கூடிய அளவுக்கு அதிகமான தடுப்பூசிகள் சந்தையில் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே தடுப்பூசி நிறுவனங்கள் விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம்.
ஒரு உலகளாவிய தொற்றுநோய் சூழலில், மருத்துவ மற்றும் விஞ்ஞான நிபுணர்கள் கருத்தை கேட்டு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இதில் நீதித்துறை தலையீடு தேவையற்றது. எந்தவொரு அதிகப்படியான, நீதித்துறை தலையீடும், எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. நிபுணர் ஆலோசனை இல்லாமல் நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் மற்றும் நிர்வாகிகள் புதுமையான தீர்வுகளைக் காண கஷ்டமான சூழல் உருவாகும். இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீழ்வேன் என நினைத்தாயோ? 3 ஆண்டுகளுக்குப் பின் ஆக்டிவ் அரசியலில் லாலு-பீகாரில் இனிதான் ஆட்டம்!
முன்னதாக ஏப்ரல் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்யக்கூடிய தடுப்பூசிகளின் விலை அதிகமாக இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி நிறுவனம், அமெரிக்க மக்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்கும் போது இந்தியாவில் மட்டும் எதற்காக அதிகப்படியான தொகையை செலுத்த வேண்டும். மத்திய அரசிடமிருந்து ஒரு தடுப்பூசி 150 ரூபாய்க்கு பெறக்கூடிய இந்த நிறுவனம் மாநில அரசுகளிடம் இருந்து 300 அல்லது 400 ரூபாய் வசூல் செய்கிறது. இந்த விலை வித்தியாசம் என்பது 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தக்கூடியது என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த நிலையில்தான் மத்திய அரசு இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.