கொரோனா பாதிப்பு: இந்தியா 3-வது ஸ்டேஜில் இருக்கிறது என்பது தவறான செய்தி
டெல்லி: கொரோனா தொற்று நோய் பாதிப்பில் இந்தியா 3-வது கட்டத்தில் இருப்பதாகவும் இந்தியாவில் சமூகப் பரவல் மூலமாக கொரோனா தொற்று நோய் பரவுவதாகவும் டாஸ்க் ஃபோர்ஸ் மருத்துவர்களை மேற்கோள்காட்டி வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று நோய் தாக்கம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. தி குயின்ட் இணையதளத்தில் டாஸ்க் போர்ஸ் டாக்டர்கள் கிரிதர் கியானி கூறியதாக மேற்கோள் காட்டி ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 3-வது ஸ்டேஜில் இருக்கிறது; இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கம் என்பது சமூகப் பரவல் மூலமாக நிகழ்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு இதனை பகிரங்கப்படுத்தவில்லை எனவும் அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக டாஸ்க் போர்ஸ் டாக்டர் கிரிதர் கியானி விளக்கம் அளித்திருக்கிறார்., அதில் தம்மை அந்த ஊடகம் பேட்டி எடுத்த நாளில் இந்தியாவின் நிலைமை 3-வது ஸ்டேஜில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டதா? இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்
மேலும் கிரிதர் கியானி அடிப்படையில் மருத்துவரும் அல்ல. அவர் பொறியியல் துறைசார்ந்த முனைவர். தற்போது அசோசியேசன் ஆப் ஹெல்கேர் புரொவைடர்ஸ் நிறுவனத்தின் (AHPI) இயக்குநராக இருக்கிறார் என அவரது சமூக வலைதளப் பக்கங்கள் உறுதி செய்திருக்கின்றன. மேலும் தம்மை பேட்டி எடுத்த ஊடகங்கள் தமது கருத்தை தவறாக மேற்கோள்காட்டி இருக்கின்றன என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
அதேபோல் கிரிதர் கியானியின் AHPI நிறுவனமும் தமது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது.