அடுத்த திருப்பம்.. காங்கிரஸ் தலைவர் போட்டியில் திக்விஜய் சிங்.. கேரளாவில் இருந்து டெல்லி விரைந்தார்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது திக்விஜய் சிங் செப்டம்பர் 30ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கேரளாவில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடவில்லை.
“சிமி” மாடல்.. 5 ஆண்டுக்கு பின் “பி.எஃப்.ஐ” அமைப்பால் செயல்பட முடியுமா? “வரலாறு” சொல்வது இதான்
அசோக் கெலாட்டால் குழப்பம்
மாறாக சோனியா காந்தி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட அறிவுறுத்தினார். இவரை எதிர்த்து திருவனந்தபுரம் எம்பி சசீதரூரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இதில் அசோக் கெலாட்டுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதால் அவர் வெற்றி பெறுவார் என்ற தகவல் வெளியானது. மேலும் காங்கிரஸில் தற்போது ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறை உள்ளது. இதனை அசோக் கெலாட் விரும்பவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சோனியா காந்தி அதிருப்தி
ஏனென்றால் ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து அசோக் கெலாட்டை நீக்கவிட்டு சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. ஆனால் அசோக் கெலாட் அதனை விரும்பவில்லை. ஒரே நேரத்தில் இருபதவிகளையும் அனுபவிக்க வேண்டும். இதற்கு மேலிடம் ஒப்புக்கொள்ளாததால் தனது ஆதரவாளர்களை சச்சின் பைலட்டுக்கு எதிராக திருப்பி உள்ளார். இதனால் சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் ராஜினாமா செய்வதாகவும் 90க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் பின்னணியில் அசோக் கெலாட் உள்ளார். இதனால் சோனியா காந்தி அசோக் கெலாட் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
வேறு சில தலைவர்கள் போட்டியிட..
இந்நிலையில் தான் அசோக் கெலாட், சசீதரூர் உள்பட மேலும் சில காங்கிரஸ் லீடர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கேசி வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய்சிங், கமல்நாத், முகுல் வாஸ்னிக், சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்டவர்கள் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் அசோக் கெலாட்டுக்கு மாற்றாக கேசி வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங் ஆகியோரில் ஒருவருக்கு சோனியா காந்தியின் ஆதரவு வழங்கலாம் என கூறப்படுகிறது.
திக்விஜய் சிங் மனுத்தாக்கல்?
இந்த தகவல்கள் பரவி வரும் நிலையில் தான் திக்விஜய் சிங் வரும் 30ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது. தற்போது கேரளாவில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற திக்விஜய் சிங் இன்று இரவு டெல்லி புறப்பட்டார். அப்போது திக்விஜய் சிங் கூறுகையில், ‛‛நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி குறித்து யாருடனும் விவாதிக்கவில்லை. கட்சி மேலிடத்திடமும் அனுமதி கேட்கவில்லை. நான் போட்டியிடுகிறேனா இல்லையா என்பது தொடர்பாக இறுதி முடிவை நான் தான் எடுப்பேன்'' என கூறினார்.
குழப்பத்தை ஏற்படுத்தும் திக் விஜய் சிங்
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திக்விஜய் சிங் கூறுகையில், ‛‛காங்கிரஸ் தலைவர் போட்டியிடும் நபர்களின் பட்டியலில் இருந்து என்னை விலக்கிவிட வேண்டாம்'' என்றார். அதன்பிறகு ஜபல்பூரில் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தனது நிலைப்பாட்டை மாற்றினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், கட்சி மேலிடம் அனுமதி அளித்தால் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இருப்பினும் தற்போது டெல்லி செல்லும் திக்விஜய் சிங், சோனியா காந்தியின் அனுமதியுடன் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.