நக்சலைட்டுகளிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் போன் நம்பர்!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கிற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாக ஆவணங்கள் கிடைத்துள்ளதாக புனே காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பீமா கோரேகான் கலவரத்திற்கு பிறகு, நக்சலைட்டுகள் என்ற பெயரில் பலரையும் மகாராஷ்டிரா போலீசார் கைது செய்து வருகிறார்கள். சமீபத்தில், நக்சலைட்டுகளிடமிருந்து போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றி உள்ளனர். அதில், நக்சலைட்டுகளின், கமாண்டோ பிரகாஷ் என்பவர், தங்களின் மற்றொரு கமாண்டோ சுரேந்தருக்கு தங்களின் நண்பர் என குறிப்பிட்டு தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
அந்த எண்ணை சோதித்து பார்த்தபோது, அது காங்கிரஸ் தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கின் தொலைபேசி எண் என்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், திக்விஜய் சிங் மீதான பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநில போலீசார் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வயது குறைந்த தொலைக்காட்சி பெண் ஊழியர் அம்ரிதா ராய் என்பவரை திக்விஜய் சிங் காதலிப்பதாக முன்பு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் இவர் சிக்கியுள்ளார்.
இதனிடையே, நக்சலைட்டுகளுடன் தனக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுவது தவறு என்றும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு தன் மீது உள்ள பயத்தால் இதுபோல பெயரை கெடுக்கிறார்கள் என்றும் திக்விஜய் சிங் கூறியுள்ளார். தனது போன் நம்பர் பொதுத் தளங்களில் எளிதாக கிடைக்கும் என்றும், போலீஸ் கூறும் அந்த நம்பரை தான் பயன்படுத்தியே 4 வருடங்கள் ஆகிறதாகவும் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
ஆதாரம் இருந்தால் என் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.