தீவிரவாத செயலில் ஈடுபட்டவரை எம்பியாக்கிய உங்களை நம்ப முடியாது.. பாஜகவை விளாசிய திக்விஜய் சிங்
டெல்லி: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA - உபா சட்டம்) மத்திய அரசு மாற்றம் கொண்டு வர முடிவு செய்து லோக்சபாவில் அதிமுக, திமுக ஆதரவுடன் அதை நிறைவேற்றியுள்ளது.
தனிப்பட்ட ஒருவரை தீவிரவாதி அல்லது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று இந்த சட்டம் மூலம் கைது செய்து விசாரிக்க முடியும் என்பதால் பொது சமூகத்தில் இந்த சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ராஜ்யசபாவில் உபா சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டதும், ப.சிதம்பரம், திக் விஜய் சிங் போன்ற மூத்த தலைவர்கள், அதன் மீது உரையாற்றினர். இந்த சட்டத் திருத்தத்திற்கு, காங்கிரஸ் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய உபா சட்டம் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது.. தனிநபரை இனி தீவிரவாதியாக அறிவிக்கலாம்
திக்விஜய் சிங் பேசுகையில் கூறியதாவது: மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான உள்நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். ஏனெனில் காங்கிரஸ் எப்போதுமே தீவிரவாதிகள் விஷயத்தில் சமரசம் செய்து கொண்டது இல்லை. பாஜக அவ்வாறு செய்துகொண்டுள்ளது.
தீவிரவாத செயலில் ஈடுபட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்டவருக்கு பாஜக தலைமை டிக்கெட் கொடுத்து போட்டியிடச் செய்து எம்பியாக்கியுள்ளது. எனவே, இந்த சட்டத்தை நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். மேலும், குஜராத்திலிருந்து வந்த சர்தார் வல்லபாய் பட்டேல் வகிக்கும் பதவியைதான் இப்போது அமித்ஷாவும் வகிக்கிறார். ஏன் பாஜக தலைமை பதவியை நீங்கள் ஜேபி நட்டாவுக்கு விட்டுக் கொடுக்க கூடாது? என்று திக்விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, ராஜ்யசபாவிலும், உபா சட்டம் நிறைவேறியது. குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் பாஜக சார்பில் எம்பியாகியுள்ளதைத்தான், திக்விஜய் சிங் இவ்வாறு மறைமுகமாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.