காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு பேருந்து சேவையை ரத்து செய்தது இந்தியா
டெல்லி: பாகிஸ்தானின் லாகூர் நகருக்கான டெல்லி பேருந்து சேவையை இந்தியா அதிரடியாக ரத்து செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ஆகஸ்ட் 6-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை அந்நாடு திருப்பி அனுப்பியது. இதனால் பாகிஸ்தானுக்கான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இந்திய ரயில்வே ரத்து செய்தது.
இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேருந்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை டெல்லி போக்குவரத்து கழகம் மேற்கொண்டுள்ளது.
இப்பேருந்து சேவையானது திங்கள், புதன்கிழமை மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் இயக்கப்படும். லாகூரில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமை நாட்களில் புறப்படும்.
முன்னதாக இந்தியாவுக்கான பேருந்து சேவையை பாகிஸ்தான் ரத்து செய்தது. இதற்கு பதிலடியாக தற்போது இந்தியாவும் பேருந்து சேவையை ரத்து செய்திருக்கிறது.