மக்கள் கைகளுக்கு நேரடியாக பணம் கொடுக்கலாம்.. மத்திய அரசு அதிரடி யோசனை.. அறிவிப்பு எப்போது?
டெல்லி: மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக அவர்களுக்கு நேரடியாக வங்கிகள் மூலம் பணத்தை வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா ஊரடங்கு காரணமாக, ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் வருவாய் இழப்புக்கு உட்பட்டு, பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசு வரிசையாக பொருளாதாரக் பேக்கேஜ் அறிவித்து வந்தது. ஆனால் இந்த பேக்கேஜ் பெரும்பாலும் கடன் வழங்கும் திட்டமாக இருந்தது. அல்லது கொடுக்க வேண்டிய கடனை சில மாதங்கள் ஒத்திப்போடும் திட்டமாக இருந்தது.
கொரோனாவுக்கு தாய் பலி.. காணாமல் போன பாட்டி.. கழிப்பறையில் பிணமாகக் கிடந்த பரிதாபம்!
காங்கிரஸ் வலியுறுத்தல்
இப்போது உள்ள சூழ்நிலையில் சாமானியர்கள் கடன் கேட்டுச் சென்றால் வங்கிகள் அதை கொடுக்குமா என்பது ஒரு கேள்விக்குறி, தொழில் துவங்குவதற்கு அவர்கள் கடன் பெறுவார்களா, தொழில் நல்லபடியாக செல்லுமா என்ற அச்சம் அவர்களுக்கு இருக்குமே, என்ற கேள்விகள் மறுபக்கம். இதையடுத்து தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஏழை எளியவர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் மாதம்தோறும் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும். இது அவர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உதவும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
நேரடி பணம்
இதுவரை இதை இலவசம் என்று கூறி புறக்கணித்து வந்த மத்திய அரசு, தற்போது மக்களிடையே பொருட்களுக்கான தேவையை உருவாக்குவதற்கு இந்த பணம் அவசியம் என்பதை உணர்ந்து வங்கி கணக்குகளில் நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் பேசிய மூத்த அதிகாரிகள் சிலர் கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவது மற்றும் நேரடியாக பயனாளிகளுக்கு பணம் செலுத்துவது ஆகிய இரண்டும்தான் இப்போது பொருட்களுக்கான தேவையை உயர்த்துவதற்கு உதவும்.
கட்டமைப்பு முதலீடு முக்கியம்
கட்டமைப்புகளில் முதலீடு செய்யும்போது அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நேரடியாக பணத்தை வங்கிகளில் செலுத்தும்போது அவர்கள் கையில் பணப்புழக்கம் உருவாகி அது மறுபடியும் சந்தைக்கு வரும். இதுதான் அரசின் திட்டம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட மூலதன செலவின் மதிப்பு 4.12 டிரில்லியன் ரூபாய். இதைவிட அதிகமாக மூலதன செலவினங்களில் ஈடுபடுவதற்கு மத்திய அரசு தயாராகி வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள், முதியோர்
வழக்கமான நாட்களை கருத்தில்கொண்டு போடப்பட்டது பட்ஜெட். ஆனால் இப்போது அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால், அந்த பட்ஜெட் அறிவிப்புகளை மட்டுமே செயல்படுத்துவது உகந்ததாக இருக்காது. பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு ஜன்தன் வங்கி கணக்கு மூலமாக ஏற்கனவே பண பரிமாற்றம் செய்யப்பட்ட உள்ளது. ஆனால் இந்த நிதி அளவு போதாது என்பதும், அதிக மக்களை நேரடி பணப் பரிமாற்றம் சென்று சேரவேண்டும் என்பதும் இப்போது உள்ள முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. இதை மத்திய அரசு நிறைவேற்றும் என்று அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.