தற்பெருமையே பேசும் நீங்க.. மக்கள் பிரச்சனை பற்றி எப்போ பேசுவீங்க.. மோடிக்கு ப.சி கேள்வி
டெல்லி: பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்தே பேசி வரும் பிரதமர் மோடியின், தற்பெருமை பேச்சுக்களை கேட்டு சோர்வடைந்துவிட்டோம் என ப.சிதம்பரம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மோடியின் பிரசாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்த பிரதமர் மோடியின் தற்பெருமை பேச்சுக்களை கேட்டு சோர்வடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை பெரும் விவகாரமாக உருவெடுத்துள்ளன. ஒரு பிரதமராக அவற்றை பற்றியெல்லாம் மோடி பேசுவதில்லை.
ஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 உயர்த்த பிரதமர் மோடி திட்டம்.. காங். புகார்
தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு முன்பாவது பிரதமர் மோடி முக்கியமான மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார். பணமதிப்பிழப்பு விவகாரம், குழப்பம் நிறைந்த ஜிஎஸ்டி, சிறு குறு தொழில்களின் அவலநிலை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Tired of listening to the PM beat his own trumpet on what he did to Pakistan. Before the campaign ends, will the PM speak on the top issues concerning the people?
— P. Chidambaram (@PChidambaram_IN) 24 April 2019
மேலும் குறிப்பாக பாஜகவை சேர்ந்தவர்களின் வெறுப்புணர்வு பேச்சுகள் தொடர்பாக பிரதமர் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் மோடியோ மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல், தனது பற்றிய தற்பெருமை பேச்சுக்களை பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் என கடுமையாக சாடியுள்ளார்.
மக்களை பாதிக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்து தேர்தல் முடிவதற்கு முன்பாவது பிரதமர் பேசுவார் என்று மக்களை போலவே, தாமும் நம்புவதாகவும் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.