திடீரென மயங்கி விழுந்த சுவாதி மாலிக்.. ஐசியூவில் அனுமதி.. 13-வது நாள் தொடர் உண்ணாவிரதத்தில் பரபரப்பு
உண்ணாவிரதத்தில் சுவாதி மாலிவால் திடீர் மயக்கம் அடைந்தார்
டெல்லி: 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சுவாதி மாலிவால் இன்று திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. இதையடுத்து டெல்லி ஆஸ்பத்திரியில் ஐசியூவில் சுவாதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய கொடூர குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
போன 3-ம் தேதியில் இருந்து இன்றுவரை அதாவது 13-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.. டெல்லி ராஜ்கட் அருகே தன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சுவாதி தொடங்கியது பெரும் பரபரப்பை முதல்நாளிலேயே ஏற்படுத்தியது.
தமது போராட்டத்தின் போது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாட்களில் தூக்கிலிட வழிவகுக்கும் திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் இவர் கடிதம் எழுதினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும், சுவாதி மாலிவாலை, டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் அம்மா, அம்மா ஏற்கனவே நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு சொன்னார்கள்.. ஆனாலும் சுவாதி கேட்கவில்லை.. தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.
இந்நிலையில், உண்ணாவிரதத்தின் 13-வது நாளான இன்று, சுவாதி மாலிவால், திடீரென மயக்கமடைந்தார்.. தொடர் போராட்டம் இருந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.. இதனால், உடனடியாக டெல்லியில் உள்ள லோக்நாயக் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.. அங்கு ஐசியூவில் சுவாதி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தீவிர சிகிச்சையும் அவருக்கு தரப்பட்டு வருகிறது.