ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இரு தரப்பும் காரசார வாதம்
டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் காரசார வாத விவாதங்கள் உச்சநீதிமன்றத்தில் துவங்கின.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, எடப்பாடி-பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தன. இப்போது ஓபிஎஸ் துணை முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகளில் உள்ளார். மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக உள்ளார். இந்த நிலையில்தான், அதிமுக கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் 11 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது சபாநாயகர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, அவர் உத்தரவு எதையும் பிறப்பிக்காத நிலையில் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
ஓராண்டு
இதனை எதிர்த்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை ஏதும் இல்லாமல் நிலுவையில் இருந்தது. எனவே, கடந்த வாரம் தலைமை நீதிபதியை சந்தித்து திமுக தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
உத்தரவிட முடியாது
சபாநாயகருக்கு இப்படித்தான் உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது. எனவே இவர்கள் தொடர்ந்துள்ள இந்த மனுக்கள் அடிப்படை முகாந்திரமற்றதாக உள்ளது என்று ஒபிஎஸ் தரப்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் வாதம் முன் வைத்துள்ளார். முன்னதாக, ஒபிஎஸ் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யகோரி ஏன் இந்த வழக்கு தொடரப்பட்டது, அதன் பின்னணி என்ன என முகுல் ரோத்தகி தலைமை நீதிபதிக்கு ஆரம்பத்தில் இருந்து விளக்கினார்.
கபில் சிபல் எதிர்ப்பு
இதன்பிறகு வாதம் முன்வைத்த, திமுக தரப்பு வக்கீல் கபில் சிபல், ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம் எல் ஏகளை தகுதி நீக்கம் செய்ய நாங்கள் கோரவில்லை. தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகருக்கு 2017 மார்ச் 20ம் தேதி கொடுத்த மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அவருக்கு அதற்கான உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.