பரபரப்பு.. தகுதி நீக்கப்பட்ட 17 கர்நாடக எம்எல்ஏக்கள் கதி என்ன.. புதன்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Recommended Video
டெல்லி: கர்நாடகாவில் தகுதி நீக்கத்திற்கு உள்ளான 17 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் வரும் புதன்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழும் வகையில், 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். கூட்டணியைச் சேர்ந்த இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் இதில் அடக்கம்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது. சூட்டோடு சூடாக 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த விசாரணை முடிவடைந்து, கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் காலியாக உள்ள 17ல், 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 11 ஆம் தேதியில் இருந்து 18ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னமும் தீர்ப்பு வெளியாகாத நிலையில், அவர்களால் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் நிலவியது. எனவே தேர்தலை ஒத்திவைக்க 17 பேரும் உச்சநீதிமன்றத்தை நேற்று அணுகியிருந்தனர்.
இந்த நிலையில், வரும் புதன்கிழமை, 13ம் தேதி, தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற இணையதளத்தில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை இவர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றால் 17 பேரின் அரசியல் எதிர்காலம் சூனியமாகும். ஆனால் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் அவர்கள் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கு பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதால், எடியூரப்பாவுக்குதான் தலைவலியாக மாறும்.