17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும், ஆனால் இடைத் தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்க உள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழும் வகையில், 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது. எனவே, 17 எம்எல்ஏக்களை, கடந்த ஜூலை மாதம், தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
நினைத்தது நடந்தது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கே வெற்றி.. எப்படி தெரியுமா?
சபாநாயகர் அதிரடி
காங்கிரசின் 14 எம்.எல்.ஏக்களும், மஜதவின் மூன்று பேரும் சபாநாயகரால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2023ல் முடிவடையும் வரை எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில்
நடைபெற்று வந்த இந்த விசாரணை முடிவடைந்து, கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியானது.
கால விரையம்
நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தார்மீகம் அவசியம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், நேரடியாக ஹைகோர்ட் சென்றிருக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கால விரையத்தை தவிர்க்க நாங்களே விசாரணை நடத்தினோம்.
போட்டியிட தடையில்லை
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ், 17 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லுபடியாகும். அதேநேரம், தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களை இந்த சட்டசபை பதவி காலம், முடிவடையும் வரை தேர்தலில் போட்டியிட கூடாது என சபாநாயகர் உத்தரவிட்டது செல்லாது. அவ்வாறு உத்தரவிட சபாநாயகர் அதிகார வரம்பில் இடமில்லை. எனவே, 17 பேரும் இடைத் தேர்தலில் போட்டியிட தடையில்லை. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
போட்டியிட திட்டம்
எனவே வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஏற்கனவே அதே தொகுதியில் தேர்வாகி, தகுதி நீக்கத்திற்கு உள்ளான, 15 பேரும் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு வகையில் தகுதி நீக்கத்திற்கு உள்ளான எம்எல்ஏக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.