தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி
டெல்லி: கர்நாடகாவில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட அதிகாரம் இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு, அடுத்தடுத்து 17 எம்எல்ஏக்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது அவையில் பங்கேற்காத 17 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 17 பேரும் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், இவர்களின் தகுதி நீக்கத்தால் காலியான 15 தொகுதிகளில் வரும் அக்டோபர், 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
இதனால் அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதி நீக்கத்துக்கு உள்ளாகியுள்ள எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை 15 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட கூடாது என்று அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
இதுதொடர்பாக இன்று வழக்கு என்வி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜரானார்.
2023 ஆம் ஆண்டு இந்த சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையும் வரை தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரினார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, தேர்தல் அறிக்கை வெளியாகி விட்டதால் இதை ஒத்திப் போடக் கூடாது. அதேநேரம் தகுதி நீக்கப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை என்றார்.
அதேநேரம், காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், இந்த சட்டசபை பதவிக்காலம் முடிவடையும் வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று வாதிட்டார்.
இது தொடர்பாக வரும் புதன்கிழமை விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் எந்த மாதிரி முடிவெடுக்கும் என்பதை வைத்துதான் 15 எம்எல்ஏக்களின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.