பன்முகத் தன்மை இந்தியாவின் பலம்.. நமது ஒற்றுமை உலகிற்கு பாடம்.. சுதந்திர தின உரையில் மோடி புகழாரம்
டெல்லி: பன்முகத் தன்மைதான், இந்தியாவின் பலம் என்றும், இந்தியாவின் ஒற்றுமை உலகத்துக்கே பாடம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின்போது தெரிவித்தார்.
Recommended Video
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், இன்று, தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா பரவல் காரணமாக வழக்கத்தை விட குறைவான விமரிசையுடன் இந்த முறை சுதந்திர தினம் கொண்டாடி வருகிறோம். வழக்கமாக இங்கே குவிந்து இருக்கக்கூடிய மாணவ மாணவிகளை இந்த முறை பார்க்க முடியவில்லை.
கொரோனா அனைவரையும் தடுத்து விட்டது. நாடு கடினமான சூழலை கடந்து கொண்டுள்ளது. இந்த நேரத்தில் கொரோனாவுக்கு எதிராக யுத்தக் களத்தில் நிற்க கூடிய மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைத்து பார்க்க கூடிய நாள் இன்று. நமது ராணுவம், துணை ராணுவம், காவல்துறை உள்ளிட்ட நாட்டின் பாதுகாவலர்களை நினைத்துப் பார்க்க வேண்டிய நாள் இது. கொரோனா நோய் பாதிப்புக்கு இடையே 130 கோடி இந்தியர்களும் சுய சார்பை நோக்கி செல்ல வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து உள்ளனர். இதுதான் தேசத்தின் மனநிலை. இந்த கனவு தற்போது உறுதியாக உருமாறியுள்ளது. சுயசார்பு என்பது 130 கோடி இந்தியர்களின் மந்திரமாக மாறிப் போயுள்ளது.
74வது சுதந்திர தினம் கோலாகலம்.. செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் மோடி
இவ்வளவு பெரிய கலாச்சார வேறுபாடுகள் கொண்ட ஒரு பெரிய நாடு எப்படி ஒன்றாக இணைந்து சுதந்திரத்துக்காக போராடும் என்று பலருக்கும் முன்பு சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தியாவின் சுதந்திர போராட்டம் என்பது உலகத்துக்கே ஒரு வழிகாட்டும் விளக்காக மாறிப்போனது.
அதேபோன்று கொரோனா வைரஸிலிருந்து நமது நாட்டு மக்கள் விடுதலை பெறுவார்கள். பன்முகத் தன்மைதான் இந்தியாவின் பலம். இந்தியாவின் ஒற்றுமை உலகத்துக்கே பாடமாக மாறியுள்ளது. இந்தியாவை தொடர்ந்து ஆளலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களுக்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைத்தது. நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள். தியாகம் செய்வதற்கு, இந்தியர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது தெரிவித்தார்.