மக்களுக்கு தீபாவளி பரிசு.. கடன் வாங்கியவர்களுக்கும் மட்டுமல்ல கடனை கட்டியவர்களுக்கும் சூப்பர் சலுகை
டெல்லி: பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு 6மாதத்திற்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல்.. மாதத் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கும் நல்ல பரிசு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. அப்போது மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.
இதன்படி வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களுக்கான மாதத் தவணையை 6 மாதங்களுக்கு செலுத்த தேவையில்லை என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த 6 மாத தவணையை அடுத்த 6 மாதத்திற்கு பிறகு மேலும் தவணைகளை நீட்டித்துக் கட்டிக்கொள்ளலாம் என்று வங்கிகள் அறிவித்தன. இந்த தவணை சலுகையை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தினர்.
வங்கிகள் அதிரடி
இந்நிலையில் அதிரடி திருப்பமாக வங்கிகள். கடன் தவணை சலுகை பயன்படுத்திய 6 மாதத்திற்கும் சேர்த்து வட்டிக்கு வட்டி வசூலிக்க தொடங்கின. இதனால் மாத தவணை சலுகையை பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசும் , ரிசர்வ் வங்கியும் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வட்டிக்கு வட்டி நடைமுறை கூடாது என்றும் உச்ச நீதிமன்றம்அறிவுறுத்தியது.
2 கோடி வரை கடன்கள்
மத்திய அரசு இதுபற்றி ஆலோசனைகளுக்கு பின்னர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதன்படி ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டி 6 மாதங்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், கூடுதலாக எந்த சலுகையும் வழங்க முடியாது என்றும் தெரிவித்தது. ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பதில் மனுவில், மத்திய அரசு கூறியுள்ளபடி, 2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும். எனினும் தவணை செலுத்தும் காலத்தை 6 மாதங்களுக்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை. புதிய சலுகை வழங்க முடியாது. ஒரு வேளை சலுகை வழங்கினால், கடன் வாங்கியவர், கடன் வாங்குபவர் ஆகியோரின் நடத்தை முற்றிலும் பாதிக்கும், பொருளாதார குற்றங்கள் அதிகரிக்கும். வங்கிகளை கடுமையாக பாதிக்கும். இருப்பினும் இச்சலுகையை வழங்க ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியது.
அவலநிலை புரியவில்லையா?
ரிசர்வ் வங்கியின் செயலை கண்டித்த உச்ச நீதிமன்றம் வட்டிக்கு வட்டி சலுகையை ஏன் உடனடியாக மக்களுக்கு வழங்கக்கூடாது? கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் அவலநிலை உங்களுக்கு புரியவில்லையா? கொஞ்சம் நினைத்து பாருங்கள். இனி வரும் காலங்கள் பண்டிகை காலங்கள், அதை மக்கள் கொண்டாட வேண்டும். எனவே இந்த சலுகையை அமல்படுத்துவதில் தான் அவர்களின் மகிழ்ச்சி உள்ளது என்று கூறியது.
எல்லா கடன்களுக்கும் தள்ளுபடி
இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி அரசு வழங்கிய தவணை சலுகையை பயன்படுத்தியவர்கள், பயன்படுத்தாமல் பணத்தை செலுத்தியவர்கள், என ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும் 6 மாத தவணைக்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. சிறுகுறு தொழில் நிறுவனங்கள், கல்வி, வீட்டுகடன், நுகர்வோர் பொருட்கள், வாகன கடன்கள், கிரிடிட் கார்டு கடன்கள் மற்றும் தனிநபர் கடன் என அனைத்து நிலுவைகளுக்கும் இந்த வட்டி தள்ளுபடி பொருந்தும். இது கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான 6 மாதங்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி ஊரங்கின் போது 6 மாதங்களுக்கு தவணை செலுத்தாத அனைவருக்கும் வட்டிக்கு வட்டி சலுகை கிடைத்துள்ளது.
கடனை கட்டியவர்களுக்கும் சலுகை
கொரோனா ஊரடங்கின் போது மாதத் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கும் சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரங்கின் போது பலரும் மாத தவணை சலுகையை பயன்படுத்தாமல் கடணை கட்டி உள்ளார்கள். எனவே வட்டிக்கு வட்டி தள்ளுபடி தொகைக்கு இணையான தொகை அவர்களுக்கு திரும்பி அளிக்கப்படும். இதுகுறித்த அறிவிப்பாணை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.