டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக!
பாஜகவை அசர வைத்து வருகின்றனர் திமுக கூட்டணி எம்பிக்கள்
Recommended Video
டெல்லி: ஊரெல்லாம் நம்ம திமுக எம்பிக்களை பற்றிதான் பேச்சா இருக்கு. ஆளாளுக்கு பாராளுமன்றத்தில் கலக்கி வருகிறார்கள்!
கருணாநிதி இருந்தபோது, திமுக எம்பிக்கள் என்றாலே ஓரிருவரே கண்முன் வந்து நிற்பார்கள். அதிலும், டெல்லியில் எந்தவித விவகாரங்களை பேசுவதானாலும் கருணாநிதியின் முக்கிய சாய்ஸ் டி.ஆர்.பாலுவாகத்தான் இருந்தார்.
ஆனால் இப்போது இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. 37 திமுக கூட்டணி எம்பிக்களும் ஒரு முடிவோடுதான் டெல்லிக்கு கிளம்பி போயுள்ளார்கள் போல இருக்கிறது
முக ஸ்டாலின்
திமுக தேர்தலில் அபார வெற்றி பெற்றதை மோடி அரசு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான். அதனால்தான் பதவியேற்பு விழாவுக்கு கூட கலந்து கொள்ளாதபடி ஒரு அழைப்பை ஸ்டாலினுக்கு விடுத்திருந்தது. ஆனால் இப்போது, திமுக எம்பிக்களின் செயல்பாடுகள் மிரள வைத்துள்ளன.
தம்பிதுரை
2009-ல் 9 எம்பிக்களை பெறும் அளவுக்கு கட்சியை முன்னேற்றிய ஜெயலலிதா, 2014-ல் 37 எம்பிக்களை பெற்று டெல்லிக்கு அனுப்பி வைத்தார். அங்கு போய் இவர்கள் என்ன செய்தார்கள்? தமிழகத்துக்கு எதிரான பலமான குரலை எழுப்பவே இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். இவர்கள் டெல்லியில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து தமிழக மக்கள் நொந்து போனார்கள். இதற்கு உதாரணம் தம்பிதுரைதான். கட்சியின் சீனியர் என்று சொல்லப்பட்ட அவரை, சொந்த தொகுதிக்குள்ளேயே மக்கள் விரட்டி அடிக்கும் நிலை உருவானது.
37 எம்பிக்கள்
அழுத்தமான எதிர்ப்புகளை பதிவு செய்யாவிட்டாலும், பாட்டு பாடாமலாவது இருந்து ஜெ. மானத்தை வாங்காமல் இருந்திருக்கலாம். இப்போது இதற்கெல்லாம்கூட வழியில்லாமல் போய் ஒரே ஒரு எம்பியை பெற்றுள்ள நிலைமைக்கு அதிமுக ஆளாகி உள்ளது. ஜெ. இல்லாத நிலையில், கடந்த 3 வருஷங்களாக அதிமுக எம்பிக்களை பார்த்து பார்த்து பழகின பாஜகவுக்கு, திமுகவின் 37 எம்பிக்களின் வருகையானது எதிர்பாராத ட்விஸ்ட்தான்.
உறுதி தன்மை
அதிலும் ஒவ்வொருத்தரும் முதல் நாளில் இருந்தே பட்டைய கிளப்பி வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பினும், அதை மத்திய அரசிடம் எடுத்து வைக்கும் பாங்கின் உறுதியையும், கறார் தன்மையையும் பார்த்து பாஜக தரப்பு மிரண்டு கிடக்கிறது.
தயாநிதி மாறன்
தயாநிதிமாறன், கனிமொழி, டிஆர்பாலு போன்றவர்கள் சீனியர்கள்தான் என்றாலும், இப்போது இவர்களிடம் புதிய மாற்றம் வந்துள்ளதாகவே தெரிகிறது. "கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என்று தயாநிதி மாறனின் கேள்வியை அவையில் யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. நேற்றைய பேச்சால், ஒட்டுமொத்த பாஜகவையும் திரும்பி பார்த்து திணற வைத்தார் தயாநிதி.
குடிநீர் பிரச்சனை
அதேபோல டிஆர் பாலு தொகுதி பிரச்சனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாநில பிரச்சனையான குடிநீர் பிரச்னையை எழுப்பினார். "தமிழகத்தில் எல்லா நதிகளும் வற்றிவிட்டன. ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு நதிகளை தவிர குடிநீருக்கு வேறு ஆதாரங்கள் இல்லை" என்று ஓங்கி அழுத்தமாக சொன்னார்.
கனிமொழி
தூத்துக்குடி எம்பி கனிமொழியோ, "துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நீதியும் கிடைக்கல,.. நிதியும் கிடைக்கல. அரசு தந்த இழப்பீடும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதை வைத்து கொண்டு அவர்களால் சிகிச்சைகூட தொடர முடியவில்லை. 17 வயசு ஸ்னோலின் தலையில் குண்டடி பட்டு உயிரிழந்திருக்கிறாள், இதற்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.
என்னாகுமோ?
திமுக கூட்டணி எம்பிக்கள் இப்படித்தான் அவையில் முழங்க ஆரம்பித்துள்ளனர். இன்னும் ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன், திருமாவளவன் போன்றோர் எல்லாம் பேச ஆரம்பித்தால், பாராளுமன்ற அவை என்னாகுமோ, பாஜக தரப்பு என்னாகுமோ தெரியவில்லை.